நாகர்கோவில்: வரும் சட்டமன்றத் தேர்தலில் நாகர்கோவில் தொகுதி தமிழக
அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அதிமுக – பாஜக
கூட்டணி அமைத்துப் போட்டியிடும் பட்சத்தில், அங்கு நிலவும் அரசியல் சூழல்
ஒரு குடும்பப் போராட்டமாக மாற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
பாஜகவின் கோட்டை நாகர்கோவில்:
நாகர்கோவில் தொகுதி நீண்டகாலமாக பாஜகவின் பலமான கோட்டையாகக்
கருதப்படுகிறது. தற்போது இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக
பாஜகவைச் சேர்ந்தவர் இருந்து வருகிறார். இருப்பினும், தேர்தல் கூட்டணி
ஒப்பந்தத்தின் அடிப்படையில் இத்தொகுதியை அதிமுக-விற்கு ஒதுக்க இரு
கட்சிகளும் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலிஜாவுக்கு சீட் கிடைக்குமா?
ஒருவேளை நாகர்கோவில் தொகுதி அதிமுக-விற்கு ஒதுக்கப்பட்டால், அங்கு
அதிமுக சார்பில் ஸ்ரீலிஜா வேட்பாளராக நிறுத்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
அவ்வாறு அவர் போட்டியிடும் பட்சத்தில், அது அவரது குடும்பத்திற்குள்ளேயே
ஒரு அரசியல் மோதலை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.

களமிறங்கும் அண்ணன் நாஞ்சில் சிவராம்:
ஸ்ரீலிஜாவின் சகோதரர் நாஞ்சில் சிவராம் தற்போது பாஜகவில் இணைந்து
செயல்பட்டு வருகிறார். இதற்கு முன்னதாக அவர் விஜய் ரசிகர் மன்றத்தின்
மாவட்டப் பொறுப்பிலும், விஜய் நற்பணி மன்றத்தின் மாவட்டத் துணைத்
தலைவராகவும் இருந்துள்ளார். கொள்கை ரீ தியான ஈடுபாட்டால் பாஜகவில்
இணைந்த அவர், தற்போது தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக அதிருப்தியில்
இருப்பதாகக் கூறப்படுகிறது.

த.வெ.க.வில் இணையத் திட்டம்:
தனது தங்கை ஸ்ரீலிஜா -கிற்கு அதிமுக சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டால்,
அவரை எதிர்த்துப் போட்டியிட நாஞ்சில் சிவராம் ஆயத்தமாகி வருகிறார்.
இதற்காக அவர் பாஜகவிலிருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில்
இணையத் கிட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. கடந்த உள்ளாட்சித் தேர்தலிலும்
தனது தங்கையை எதிர்த்து, தனது மனைவியைப் போட்டியிட வைத்தவர்
நாஞ்சில் சிவராம் என்பது குறிப்பிடத்தக்கது.

சீட் பெறத் தீவிர முயற்சி:
தவெக சார்பில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட சீட் கோரி, சிவராம்
விரைவில் சென்னைக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக அவர்
பல்வேறு வழிகளில் காய்களை நகர்த்தி வருகிறார்:
● தனது தந்தையின் நண்பராக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்
செங்கோட்டையன் மூலமாகப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து
வருகிறார்.

● விஜய் ரசிகர் மன்றத்தில் பொறுப்பில் இருந்தபோது தனக்கு நெருக்கமாக
இருந்த நிர்வாகிகள் மூலமாகவும் சீட் பெற முயற்சி செய்து வருகிறார்.
சாதகமான அரசியல் சூழல்:
இதற்கிடையே, நாகர்கோவில் தொகுதியில் போட்டியிடுவார் என்று
எதிர்பார்க்கப்பட்ட தவெக மாவட்டச் செயலாளர் மாதவன், தற்போது
கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகக்
கூறப்படுகிறது. இந்தச் சூழலைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, நாகர்கோவில்
தொகுதியில் தவெக சார்பில் சீட் பெறுவதில் சிவராம் மிகுந்த கவனம் செலுத்தி
வருகிறார்.
மும்முனைப் போட்டிக்குத் தயார்:
“எந்த எல்லைக்குச் சென்றாவது இந்தத் தேர்தலைச் சந்திப்பேன்” என நாஞ்சில்
சிவராம் உறுதியாகத் தெரிவித்துள்ளார். நாகர்கோவில் தொகுதியில் அண்ணன் –
தங்கை இடையேயான இந்தப் போட்டி, வரும் தேர்தலில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

