தென்னிந்திய சினிமாவில் வேகமாக உயர்ந்து வரும் சென்சேஷனல் நடிகைகளில் முன்னிலையில் இருப்பவர் ஸ்ரீலீலா.
குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர், இந்த ஆண்டு தமிழில் வெளியான பராசக்தி திரைப்படத்தின் மூலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். ஆனால், பல எதிர்பார்ப்புகளுடன் வெளியான அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாமல், சராசரி வரவேற்பில் முடிந்தது.
அதனைத் தொடர்ந்து, சமீபத்தில் வெளியான உஸ்தாத் பகத் சிங் திரைப்படமும் விமர்சகர்களிடையே நல்ல மதிப்பீட்டை பெறாமல், எதிர்மறையான விமர்சனங்களையே அதிகமாக சந்தித்து வருகிறது. இதனால் ஸ்ரீலீலாவின் சமீபத்திய படத் தேர்வுகள் குறித்து ரசிகர்கள் மற்றும் திரையுலகில் பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், நடிப்பைத் தாண்டி தனது ஆற்றல்மிக்க நடனத்தால் ரசிகர்களை கட்டிப்போடும் ஸ்ரீலீலா, குறிப்பாக புஷ்பா 2 திரைப்படத்தில் ஆடிய உற்சாகமான நடனத்தின் மூலம் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி, இளம் ரசிகர்களிடையே தனி இடத்தை பிடித்தார்.

ஆனால், இந்த புகழின் மறுபக்கமாக, கடுமையான ட்ரோல்கள் மற்றும் விமர்சனங்களையும் அவர் சந்தித்து வருகிறார். சமீபத்திய பேட்டியில் இதுகுறித்து திறந்த மனதுடன் பேசிய ஸ்ரீலீலா, ஆரம்ப காலத்தில் சமூக வலைதளங்களில் வரும் எதிர்மறை கருத்துகள் தன்னை மிகவும் பாதித்ததாகவும், பலமுறை தனியாக கண்ணீர் விட்டு அழுததாகவும் உணர்ச்சிகரமாக பகிர்ந்துள்ளார்.
மேலும், காலப்போக்கில் விமர்சனங்களை சமாளிக்கும் மன வலிமை தன்னிடம் வளர்ந்துவிட்டதாக கூறிய அவர், “எதை ஏற்க வேண்டும், எதை புறக்கணிக்க வேண்டும் என்பதை இப்போது தெளிவாக புரிந்து கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார். தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் தொடர்ந்து படங்களில் பிஸியாக இருக்கும் ஸ்ரீலீலா, கடந்த அனுபவங்களைப் பாடமாக எடுத்துக்கொண்டு, தனது வளர்ச்சிக்கும் நடிப்புத் திறன் மேம்பாட்டிற்கும் மட்டுமே முழு கவனம் செலுத்தி வருவதாகவும் கூறினார்.

