23 நாட்களில் 50க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது குறித்து வானதி சீனிவசான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 23 நாட்களில் தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நடந்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி திமுகவின் கொடுங்கோல் ஆட்சிக்கான சாட்சி!
பொதுவாக தேர்தல் காலம் நெருங்கியதும், சட்டம் ஒழுங்கைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்து மக்கள் மனதில் இடம்பிடிக்கவே எந்தவொரு ஆளுங்கட்சியும் விரும்பும்.
ஆனால், கடந்த ஐந்தாண்டுகளாகச் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்காமல் மெத்தனமாக இருந்த திமுக அரசோ, ஆட்சியின் இறுதி நேரத்திலும் தன் அலட்சியத்தால் சட்டம் ஒழுங்கை மொத்தமாக உருக்குலைத்துள்ளது.

இதனால் பச்சிளம் குழந்தை முதல் பல் விழுந்த மூதாட்டி வரை அனைவரின் பாதுகாப்பும் பறிக்கப்பட்டு, தமிழக மக்களின் வாழ்வே நரகமாகி வருகிறது. ஆனால், திமுகவோ மீண்டுமொருமுறை ஆட்சியைப் பிடிக்கும் கனவில் மிதந்து வருகிறது.
ரோம் பற்றியெறிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்ததைப் போல, பெண்கள் பாதுகாப்பு களவாடப்படும் போது கனவில் மிதக்கும் அராஜக திமுக ஆட்சி இனி என்றும் தேவையில்லை! திமுக வீழட்டும்! பெண்கள் வெல்லட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

