தமிழக அரசியல் களத்தில் தேர்தல் சூடு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், புதிய திருப்பங்களும், அதிரடி விளக்கங்களும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
அடுத்த மாதம் 23ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) முதன்முறையாக களம் இறங்குவது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதற்கிடையில், சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக டெல்லி சென்றிருந்த விஜய், அங்கு பாரதிய ஜனதா கட்சி (பாஜக) முக்கிய தலைவர்களை சந்தித்து கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது. இந்த தகவல் அரசியல் வட்டாரங்களில் வேகமாக பரவிய நிலையில், த.வெ.க. தரப்பில் இருந்து உடனடி மறுப்பு வெளிவந்தது. கூட்டணி தொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கட்சி நிர்வாகிகள் தெளிவுபடுத்தினர்.
இந்நிலையில், பாஜக – த.வெ.க. கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்ற தகவல்கள் மீண்டும் வெளியாகியதால், கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான ஆதவ் அர்ஜுனா நேரடியாக விளக்கம் அளித்துள்ளார்.
கொளத்தூரில் நடைபெற்ற த.வெ.க. பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும். எங்களது நிலைப்பாடு தெளிவானது. பல்வேறு தரப்பிலிருந்து பல்வேறு ‘ஆஃபர்கள்’ எங்கள் தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டன. குறிப்பாக 90 தொகுதிகள் வழங்கப்படும் என்றும், மேலும் ஆட்சி அமைந்தால் முதல்வர் பதவியை இரண்டரை ஆண்டுகள் வீதம் பகிர்ந்து கொள்ளலாம் என்ற அளவுக்கு பேரங்கள் பேசப்பட்டன. ஆனால், அவற்றை அனைத்தையும் விஜய் முற்றிலும் நிராகரித்துவிட்டார்,” என்று உறுதியாக தெரிவித்தார்.

மேலும், “அதிகாரம் அல்லது பதவிக்காக டெல்லிக்கு தலைவணங்கும் அரசியல் எங்களுடையது அல்ல. த.வெ.க. தனது தனித்துவ அரசியல் பாதையில் தான் பயணிக்கும்,” எனவும் அவர் வலியுறுத்தினார்.
இந்த விளக்கம் வெளியாகியுள்ள நிலையில், த.வெ.க. உண்மையில் தனித்து போட்டியிடுமா, அல்லது தேர்தல் நெருங்கும் நேரத்தில் புதிய அரசியல் கூட்டணிகள் உருவாகுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் மீண்டும் எழுந்துள்ளது.

