தமிழ் சினிமாவில் இருபதாண்டுகளுக்கும் மேலாக தனது முன்னணி இடத்தை நிலைநிறுத்தி வரும் நடிகை குறித்து பரபரப்பான தகவல் ஒன்று இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்பட உலகில் தொடர்ந்து பயணித்து வரும் திரிஷா, இன்று வரை முன்னணி நடிகையாக தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பல தலைமுறை ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ள அவர், தற்போதும் கதாநாயகி மையப்படுத்திய கதைகளில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
அவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள “கருப்பு” திரைப்படம் மீது ரசிகர்களிடையே ஏற்கனவே அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. குறிப்பாக, இந்தப் படத்தில் பல ஆண்டுகள் கழித்து சூர்யாவுடன் திரிஷா இணைந்து நடித்திருப்பது, ரசிகர்களுக்கு ஒரு முக்கிய ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், 42 வயதிலும் முன்னணி நடிகையாகத் திகழும் திரிஷா திடீரென சினிமாவிலிருந்து விலகப்போகிறார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தனது அறிமுகம் முதல் இதுவரை சுமார் 75 படங்களில் நடித்துள்ள அவர், தொடர்ந்து பிஸியாக இருந்து வந்த நிலையில் இப்படியான தகவல் வெளியாகியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும், கடந்த மூன்று மாதங்களாக எந்த புதிய படங்களிலும் திரிஷா ஒப்பந்தமாகவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதுவே, அவர் சினிமாவில் இருந்து ஓய்வு எடுக்கிறாரா? அல்லது தனது அடுத்த கட்டத்தை திட்டமிட்டு வருகிறாரா? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஆனால், இந்த தகவல்கள் குறித்து திரிஷா தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை. இதனால், இது வெறும் வதந்தியா? அல்லது உண்மையிலேயே ஒரு முக்கிய முடிவுக்கான முன்னோட்டமா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
சினிமா தான் தனக்கு எல்லாமே, என்னுடைய காதல் சினிமா மீது மட்டும்தான் என திரிஷா கூறியிருந்தார். மேலும் திருமணம் ஆனால் கூட சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன், ஒரு வேளை கர்ப்பமானால் மட்டும் தான் விலகுவேன் என்றும் கூறியிருந்தார்.

