அமலாக்கத் துறை புகார் தொடர்பாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கை எடுக்கவில்லை என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமன முறைகேடு அமலாக்கத் துறை புகார் தொடர்பாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் வழக்குப் பதிவு செய்யாத லஞ்ச ஒழிப்பு துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அடுத்த வாரம் பட்டியலிடப்படும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவு வரவேற்கத்தக்கது.
அமலாக்கத்துறை அளித்த புகாரில் முகாந்திரம் இருந்தும் லஞ்ச ஒழிப்புத் துறை யாரைக் காப்பாற்ற காலதாமதம் செய்கிறது என்ற சந்தேகம் வலுக்கிறது.

அரசு எந்திரத்தில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் துளியளவு கையூட்டு இன்றி நியாமான முறையில் நிறைவேற்றுவதை உறுதிப்படுத்தும் உன்னத பணியில் இருக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை இது போன்ற பெரும் ஊழல் முறைகேட்டில் இன்னும் விசாரணையை தொடங்காமல் மௌனம் சாதிப்பது அதன் நம்பிக்கையை சீர்குலைப்பதாக உள்ளது.
எனவே லஞ்ச ஒழிப்புத் துறை உடனடியாக விசாரணையை துவக்கி அரசு நிர்வாகம் முறையாக நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

