நாடகக்காரர்களின் கரங்களில் இனி தப்பித்தவறி கூட அதிகாரம் கிடைத்து விடக் கூடாது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம் வைத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டிற்குள் புகுந்த கஞ்சா போதை ஆசாமிகள், அங்கு இருந்த நோயாளிகள் மற்றும் மருத்துவர்களை அரிவாளைக் காட்டி மிரட்டியுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது. அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த யாருக்கும் உடல்ரீதியான பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது சற்று ஆறுதல் அளித்தாலும், அரசு மருத்துவமனைக்குள் மக்களுக்கு மரண பயத்தைக் காட்டிய இச்சம்பவம் எளிதில் கடந்து செல்ல முடியாதது.
“போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்” என மேடையில் உறுதிமொழி எடுத்த முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களின் அவல ஆட்சியில், பெட்டிக்கடைகளில் கூட போதைப் பொருட்கள் சரளமாகக் கிடைக்கின்றன, அரசுப் பள்ளிகள், அரசு மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் என எங்கு பார்த்தாலும் குற்றவாளிகள் போதையில் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றனர், போதையின் வீரியத்தில் பார்ப்போர் மீதெல்லாம் தாக்குதல் தொடுப்பது தமிழகத்தில் வாடிக்கையாகிவிட்டது, சீரழிந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கால் போதையில் ரகளை செய்பவர்களைக் கண்டிப்பதற்கு கூட பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.

ஆனால், இதையெல்லாம் மூடி மறைத்துவிட்டு “தமிழகத்தில் போதை நடமாட்டமே இல்லை” என வாய்கூசாமல் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் அறிவாலயத்தின் உடன்பிறப்புகளைக் கண்டாலே கடும் கோபம் தான் எழுகிறது. இவர்களைப் போன்ற நாடகக்காரர்களின் கரங்களில் இனி தப்பித்தவறி கூட அதிகாரம் கிடைத்து விடக் கூடாது! என பதிவிட்டுள்ளார்.

