மோசடியில் ஈடுபட்டதால் கடுமையான நடிவடிக்கை எடுப்பேன் என பாஜக நிர்வாகியும், நடிகையுமான குஷ்பு எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் முன்னணி ஆன்லைன் விற்பனை தளமாக செயல்பட்டு வரும் Amazon India மீது நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பணம் செலுத்தி ஆர்டர் செய்த பொருள் கிடைக்காத நிலையில், அது “டெலிவரி செய்யப்பட்டுவிட்டது” என்று காட்டப்பட்டதாகவும், கடந்த 40 நாட்களாக வாடிக்கையாளர் சேவை மையம் எந்த தீர்வும் வழங்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள குஷ்பு, “அமேசான் இந்தியா எப்போது முதல் இவ்வாறான மோசடி செயல்களில் ஈடுபடத் தொடங்கியது என்பது எனக்கு புரியவில்லை. நாங்கள் முன்பே பணம் செலுத்தி ஆர்டர் செய்திருந்த பெரிய அளவிலான ஃபர்னிச்சர் பொருள், என் அம்மாவிடம் வந்து சேரவில்லை. ஆனால், அமேசான் தரப்பில் அது டெலிவரி செய்யப்பட்டுவிட்டதாக காட்டப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த பிரச்சினையைத் தீர்க்க வாடிக்கையாளர் சேவை மையத்தை 40 நாட்களுக்கு முன்பே தொடர்பு கொண்டதாகவும், இதுவரை எந்தத் தெளிவான பதிலும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், சமீபத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியாக இருந்த “சேதன்” (Chetan) என்ற ஊழியர் தனது அம்மாவை 30 நிமிடங்களுக்கு மேலாக காத்திருக்க வைத்ததுடன், பின்னர் எந்த உதவியும் செய்ய மறுத்து, “உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள்ளுங்கள்” என்ற முறையில் பதிலளித்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த சம்பவம் காரணமாக, நீண்ட காலமாக வாடிக்கையாளர்களிடம் பெற்றிருந்த நம்பிக்கையையும் நல்லபெயரையும் அமேசான் இந்தியா இழந்து வருவதாகவும், இதுபோன்ற பிரச்சினைகள் தொடர்ந்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உருவாகும் என்றும் குஷ்பு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

