கோவையில் வட மாநிலத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி அதே பகுதியில் வசித்து வரும் வடமாநில வாலிபரால் குழந்தை திருமணம் செய்யப்பட்டு ஐந்து மாத கர்ப்பிணியான நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு 20 நாட்களுக்கு மேலாகியும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யாமல் இழுத்தடிப்பதாக அந்த சிறுமி மற்றும் அவரது தாய் கண்ணீர் மல்க கதறி அழுதது காண்போரை கண் கலங்கச் செய்தது.
கோவை சாய்பாபா காலனி அடுத்த கருணாநிதி நகர் பகுதியில் வசித்து வரும் வடமாநில தம்பதியரின் 14 வயது மகள் அதே பகுதியில் வசித்து வரும் பீகாரைச் சேர்ந்த 23 வயது இளைஞரை காதலித்து வந்துள்ளார்.
இதனை சாதகமாக பயன்படுத்திய அந்த இளைஞர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமியை அழைத்துக் கொண்டு மேட்டுப்பாளையம் பகுதிக்கு சென்று அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து மாலை மாற்றி குழந்தை திருமணம் செய்துள்ளார்.
பின்னர் வீட்டிற்கு வந்த சிறுமி சாதாரணமாக இருந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவரது நடவடிக்கையில் மாற்றம் தெரியவே சிறுமியின் தாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோது சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரிய வரவே அதிர்ச்சி அடைந்த தாய் உடனடியாக சிறுமியிடம் விசாரிக்கவே இளைஞர் தன்னை அழைத்துக் சென்று திருமணம் செய்ததுடன் கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் தாய் அந்த வாலிபரை அழைத்து பேசியபோது அவர் மிரட்டும் தொணியில் பேசவே இது குறித்து சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆனால் சம்பவம் நடைபெற்றது மேட்டுப்பாளையம் பகுதி என்பதால் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு காவல்துறையினர் கூறவே அவரும் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்து அங்கு ஜீரோ முதல் தகவல் அறிக்கையை பெற்று பின்னர் சிறுமையை கடந்த 20 நாட்களுக்கு முன்பு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து கருவை கலைத்துள்ளனர்.
பின்னர் ஓரிரு நாட்களில் சிறுமியின் உடல்நிலை சீரானதை தொடர்ந்து தங்களை டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும் என சிறுமியின் பெற்றோர் மருத்துவமனை நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளனர். அதே வேளையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பம் ஆக்கிய வட மாநில வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.
ஆனால் வட மாநிலத்தவர் என்ற அடிப்படையில் புகாரை பெற மறுத்ததுடன் சாய்பாபா காலனி காவல் நிலையம் மற்றும் மேட்டுப்பாளையம் காவல் நிலையம் என இரண்டு காவல் நிலையங்களுக்கும் மாறி மாறி அலைகழித்த காவல்துறையினர் தற்பொழுது வரை இது குறித்து எந்தவித முதல் தகவல் அறிக்கையையும் பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.
இதனால் சிறுமியை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யாமல் மருத்து வரும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் எந்தவித சிகிச்சையும் இன்றி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே சிறுமியை வைத்துள்ளனர்.
கணவன் மனைவி இருவரும் அன்றாடம் கூலி வேலைக்கு செல்லும் சூழலில் சிறுமியின் பாதுகாப்புக்காக ஒருவர் மாறி ஒருவர் மருத்துவமனையிலேயே இருப்பதால் ஒருவேளை உணவுக்கு கூட வழியின்றி சிரமப்படுவதாக கூறி சிறுமியின் தாய் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
இது ஒரு புறம் இருக்க மருத்துவமனை நிர்வாகத்தினர் சிறுமியின் பெற்றோர் கண்ணீர் மல்க கதறியும் அவர்களை மருத்துவமனையை விட்டு டிஸ்சார்ஜ் செய்யாமல் அங்கேயே வைத்திருப்பதால் அடுத்து என்ன செய்வது என தெரியாமலும் ஆதரவின்றியும் அவர்கள் தவித்து வருகின்றனர்.
எனவே சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததுடன் தற்பொழுது தான் எந்த குற்றமும் செய்யாதவன் போல் சாதாரணமாக அதே பகுதியில் நடமாடி வரும் அந்த வட மாநில இளைஞர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.

