உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற “எஞ்சாய் எஞ்சாமி” பாடலைச் சுற்றிய சர்ச்சை மீண்டும் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாடலை உருவாக்கியதில் யாருக்கு எவ்வளவு பங்கு என்பதைக் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் ராப் பாடகர் அறிவு இடையே கடுமையான கருத்து வேறுபாடு வெளிப்படையாகி வருகிறது.
கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான இந்த பாடல், வெளியான சில நாட்களிலேயே உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பார்வைகளை பெற்றது. கிராமிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இந்த பாடல் சர்வதேச அளவிலும் கவனம் பெற்றது. ஆனால் அதற்குப் பின்னாலேயே படைப்புரிமை மற்றும் அங்கீகாரம் தொடர்பான விவாதங்கள் இருந்ததாக தற்போது வெளிவந்துள்ளது.
சமீபத்தில் சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் ஒருவர், “எஞ்சாய் எஞ்சாமி” பாடலை சந்தோஷ் நாராயணன் மற்றும் அவரது மகள் தீ, ராப் பாடகர் அறிவிடமிருந்து ‘திருடி’ பயன்படுத்தியதாக குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த சந்தோஷ் நாராயணன், பாடலின் உருவாக்கம் குறித்து விரிவாக விளக்கம் அளித்தார்.
அவரது பதிவில், “இந்த பாடலுக்கான அடிப்படை யோசனையை என் மகள் தீ உருவாக்கினார். பாடலில் பயன்படுத்தப்பட்ட சில ட்யூன்களும் அவருடையவை. பாடலின் மையக் கதைக்களம் மற்றும் கருத்தை இயக்குனர் மணிகண்டன் உருவாக்கினார். அவர் அப்போது என்னுடன் ‘கடைசி விவசாயி’ படத்தில் பணியாற்றி வந்தார். பாடலில் இடம்பெற்ற அனைத்து இசை அமைப்புகளையும் நான் உருவாக்கி தயாரித்தேன். அறிவு பெரும்பாலான பாடல் வரிகளை எழுதி பாடியுள்ளார். சில பாரம்பரிய ஒப்பாரி வரிகளையும் அவர் தழுவி பயன்படுத்தினார்” என கூறினார்.
மேலும், “நாம் டிஜிட்டல் காலத்தில் வாழ்கிறோம். எனவே யார் என்ன செய்தார்கள் என்பதற்கான ஆதாரங்களை எளிதில் நிரூபிக்க முடியும்” என்றும் அவர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த ராப் பாடகர் அறிவு, தன்னுடைய பங்களிப்பை வெளிப்படையாக விளக்கும் வகையில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எஞ்சாய் எஞ்சாமி பாடலின் பீட் முதலில் எனக்கு அனுப்பப்பட்டது. அதனை அடிப்படையாகக் கொண்டு நான் பாடல் வரிகளை எழுதி, முக்கிய குரல் மெல்லிசையையும் உருவாக்கினேன். என் சொந்த கலாச்சார வரலாறும் வாழ்க்கை அனுபவங்களும் இந்த பாடலின் உள்ளடக்கமாக அமைந்தது” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “இந்த பாடல் என் கிராமத்தில் படமாக்கப்பட்டது. என் மக்களின் கதைகளையும் அவர்களின் வரலாறையும் உலகிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நான் இந்த பாடலை உருவாக்கினேன். ஆனால் முழு பாடலையும் எழுதி, முக்கிய மெல்லிசையை உருவாக்கியிருந்தாலும், அந்த பாடலில் என்னை ‘Featured Artist’ ஆக மட்டுமே குறிப்பிடப்பட்டனர். அந்த நேரத்தில் அதன் உண்மையான அர்த்தம் எனக்கு புரியவில்லை” என கூறியுள்ளார்.
அதோடு, கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த பாடலுக்கான உரிமைகள் மற்றும் ராயல்டி தொடர்பாக தன்னுக்கு எந்த நியாயமான பங்கும் கிடைக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். “இது அனுதாபம் பற்றிய விஷயம் அல்ல. இது படைப்பின் அங்கீகாரம், உரிமை மற்றும் உழைப்பின் கண்ணியத்தைப் பற்றியது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பிரச்சனையை தனிப்பட்ட முறையில் பலமுறை தீர்க்க முயற்சி செய்ததாகவும், அதற்காக சந்தோஷ் நாராயணனை நேரடியாக சந்திக்க முயன்றதாகவும் அறிவு தெரிவித்துள்ளார். ஆனால் அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து எந்த ஊடகத்திலும் திறந்த விவாதத்திற்கு தயாராக இருப்பதாகவும் அறிவு சவால் விடுத்துள்ளார்.
இந்த நிலையில், உலகளவில் ஹிட் ஆன “எஞ்சாய் எஞ்சாமி” பாடலைச் சுற்றிய இந்த புதிய சர்ச்சை தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதமாக மாறியுள்ளது. இசை ரசிகர்களும் நெட்டிசன்களும் இந்த விவகாரத்தில் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

