தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கருத்து பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவர் தமிழர்களிடமும் எம்.ஜி.ஆர் ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற தெலுங்கு நடிகர் காந்தா ராவ் நினைவு விருது வழங்கும் விழாவில் ராஜேந்திர பிரசாத் கலந்து கொண்டு பேசினார். அந்த நிகழ்ச்சியில் காந்தா ராவின் திறமையைப் புகழ்ந்து பேசும் போது, அவரது வாள் சண்டை திறமை மற்றும் நடிப்பு குறித்து பாராட்டிய ராஜேந்திர பிரசாத், அதனை ஒப்பிட்டு முன்னாள் தமிழக முதல்வரும் நடிகருமான எம்.ஜி.ஆரை குறிப்பிடும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.
காந்தா ராவின் வாள் சண்டை மற்றும் நடிப்பை பார்த்து எம்.ஜி.ஆருக்கே பயம் ஏற்பட்டதாகவும், அதைக் குறிக்கும் வகையில் ஆட்சேபத்திற்குரிய சொற்றொடரை பயன்படுத்தி பேசியதாக கூறப்படுகிறது. இந்த கருத்து சமூக வலைதளங்களில் பரவியதும், தமிழ் திரையுலகினரிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது.
பலரும் இந்த கருத்தை கண்டித்து பதிவுகள் வெளியிட்டனர். குறிப்பாக தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், ராஜேந்திர பிரசாத் தனது பேச்சுக்காக பொதுவாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த நிலையில் எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகர் ராஜேந்திர பிரசாத் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது விளக்கத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கூறியதாவது: “எம்.ஜி.ஆர் தமிழ் சினிமாவின் கடவுள் போன்றவர். காந்தா ராவ் சாரை புகழ்ந்து பேசும் போது, தவறுதலாக எம்.ஜி.ஆர் குறித்து ஒரு ஆட்சேபகரமான வார்த்தையை பயன்படுத்திவிட்டேன். அதற்காக தமிழ் மக்களிடமும், எம்.ஜி.ஆர் ரசிகர்களிடமும் மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனி இதுபோன்ற தவறு மீண்டும் நடக்காது” என தெரிவித்துள்ளார்.
வருத்தம் தெரிவித்த நடிகர் ராஜேந்திர பிரசாத்!#ActorRejendraprasad #mgr #nadigarsangam #nasser#vishal pic.twitter.com/8dpyBRPW5Z
— FridayCinema (@FridayCinemaOrg) March 13, 2026
ராஜேந்திர பிரசாத் வெளியிட்ட இந்த மன்னிப்பு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதன் மூலம் இந்த சர்ச்சை தற்காலிகமாக அடங்கும் எனவும் கூறப்படுகிறது.

