போத்தனூரில் குடிநீர் குழாய் உடைப்பால் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் பாரம் ஏற்றிச் சென்ற லாரி சிக்கிக் கொண்டது.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட போத்தனூர் பள்ளிவாசல் சாலையில், குடிநீர் குழாயில் ஏற்பட்ட பலத்த உடைப்பு காரணமாகப் பெருமளவில் தண்ணீர் வெளியேறியது. இதன் விளைவாக, தார் சாலைக்குக் கீழே நிலத்தடி மண் அரிப்பு ஏற்பட்டு பெரும் பள்ளம் உருவானது.
இதனை அறிந்த வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையைப் பயன்படுத்திய நிலையில், நிலைமையை உணராமல் அவ்வழியாகச் சென்ற ஒரு தனியார் லாரி, மண்ணரிப்பு ஏற்பட்ட இடத்தில் சிக்கியது. லாரியின் பாரம் காரணமாகச் சாலை திடீரென உள்வாங்கியதில், வாகனத்தின் பாதி உடல் பள்ளத்திற்குள் புதைந்தது.
நல்வாய்ப்பாக, லாரி ஓட்டுநர் விரைவாகச் செயல்பட்டு வாகனத்தில் இருந்து குதித்ததால் உயிர் தப்பினார். லாரி மீட்கப்பட்ட பிறகு, உடைந்த குடிநீர் குழாயைச் சரி செய்யும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொள்ள உள்ளனர்.

