தமிழகத்தில் நடந்துள்ள குற்றச்சம்பவங்கள் குறித்து உள்துறை செயலர் மற்றும் டிஜிபி வெங்கட்ராமன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். குறிப்பாக கடந்த ஆண்டுகளை பொறுத்தவதை குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளதாகவும், அதிமுக ஆட்சியில் 1597 குற்றச்சம்பவங்கள் தற்போது 461ஆக குறைந்துள்ளதாக கூறினார்.
இந்த ஆண்டு நடந்த குற்றச்சம்பவங்கள் பற்றி எதுவும் சொல்லாததால் இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களை குவித்து வருகின்றனர்
அந்த வகையில் பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், தமிழக வருவாய்துறையும், காவல்துறையும் திமுகவின் துணை அமைப்புகள் போல செயல்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழக அரசின் உள்துறை செயலாளர் மற்றும் தமிழக காவல்துறை பொறுப்பு இயக்குனர் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோரின் மழுப்பலான, உண்மைக்கு புறம்பான தகவல்களை பதிவு செய்யும் பத்திரிக்கையாளர் சந்திப்பை பார்க்கும் வருந்தத்தக்க நிலை தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது வேதனையளிக்கிறது.
கடந்த இரண்டு மாதங்களில் தமிழகமெங்கும் 60 க்கும் மேற்பட்ட படுகொலைகள் நடந்திருப்பதும், கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகத்தில் தொடர்ச்சியாக நாள்தோறும் படுகொலைகள் நடந்தேறி வருவதும் 57 மாத திமுக ஆட்சியில் 7600 படுகொலைகள் நடந்திருப்பதும் தமிழகத்தில் மிகமோசமான நிலைக்கு சட்டம் ஒழுங்கு சீரழிந்திருப்பதையும் தமிழகத்தில் இதுவரை திமுக ஆட்சியில் நடைபெற்றுள்ள குற்ற சம்பங்களின் எண்ணிக்கை உணர்த்துகிறது.

திமுக ஆட்சி எப்போது விடியும், தமிழகத்திற்கு எப்போது விமோச்சனம் பிறக்கும் என தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று தமிழகத்திற்கு விமோசனம் பிறக்கும் என்பது நிதர்சனம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

