17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு, தவெக பிரச்சார மேலாண்மை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனன் திமுகவை சரமாரியாக விலகியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்தியைக் கேட்கும்போது நெஞ்சம் பதைபதைக்கிறது. இன்னும் எத்தனை தமிழ்நாட்டு மகள்கள் இந்த திறனற்ற திமுக ஆட்சியின் கையாலாகாதனத்தால் பாதிக்கப்படப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
நேற்று முன்தினம் மதுராந்தகம் அருகே பதினான்கு வயது சிறுமிக்கு பாலியல் வன்முறை, மூன்று நாட்களுக்கு முன் நாமக்கலில் ஏழு வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை, சில வாரங்களுக்கு முன் கிருஷ்ணகிரியில் இரண்டரை வயதுக் குழந்தை பாலியல் படுகொலை என தமிழக குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் எதிராக இன்று தமிழ்நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கொடும் வன்முறைகளைப் பார்க்கும்போது மனம் பதறுகிறது. தமிழ்நாடு முற்றிலுமாக பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறி வருகிறது.
திமுக ஆட்சிக்கு மக்கள் மீது அக்கறையில்லை; குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி துளியும் கவலை இல்லை; சட்டம்-ஒழுங்கு, சமூக அமைதி போன்ற எந்த அவசியமான விஷயங்களிலும் பொறுப்பில்லை. மாறாக, மது மற்றும் போதைப் பொருட்களை 24 மணிநேரமும் அனுமதித்து வருகிறது; குற்ற மனநிலை உடைய நபர்களைத் தொடர்ந்து குற்றம் செய்யத் தூண்டும் விதமாக வேடிக்கை பார்த்து வருகிறது திறனற்ற திமுக அரசு.

தமிழகத்தின் தாய்மார்களும், குழந்தைகளும் வேதனையில் துடித்துக்கொண்டிருக்க, பொறுப்பான முதல்வரோ விளம்பர உலகில் கற்பனையில் வாழ்ந்து வருகிறார். இங்கு நடந்துவரும் வன்முறைகளும், பாலியல் வன்கொடுமைகளும், அச்ச நிலையும் பற்றி எப்போது உணரப்போகிறார் முதல்வர்? குற்றங்களைத் தடுக்க தவறிய திமுக ஆட்சிக்கு மக்கள் விரைவில் பதில் சொல்வார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

