திமுக கூட்டணிக் கட்சியின் மக்களவை உறுப்பினருக்கே தமிழகத்தில் பாதுகாப்பில்லையா என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கார்த்தி சிதம்பரம் அவர்களின் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – திமுக கூட்டணிக் கட்சியின் மக்களவை உறுப்பினருக்கே தமிழகத்தில் பாதுகாப்பில்லையா ?
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கார்த்தி சிதம்பரம் அவர்களின் அலுவலகத்தில் இன்று அதிகாலை பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக தலைவரும், முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் குடும்பத்தினரை தவிர வேறு யாருக்குமே பாதுகாப்பில்லை என்பதை திரு.கார்த்தி சிதம்பரம் அவர்களின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதிபடுத்தியுள்ளது.
தமிழகத்தில் சாலைகளில், வீடுகளில், தலைவர்களின் நினைவாலயங்களில் சமூக விரோதிகளால் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்படும் சம்பவங்களை கண்டும் காணாதது போல இருக்கும் திமுக அரசின் அலட்சியப் போக்கே, திமுக கூட்டணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அலுவலகத்தின் மீதே பெட்ரோல் குண்டு வீசும் அளவிற்கான துணிச்சலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
எனவே, திமுகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு கூட பாதுகாப்பு அளிக்க முடியாத அளவிற்கு தமிழகத்தின் சட்டத்தையும், ஒழுங்கையும் சந்தி சிரிக்கும் அளவிற்கு சீரழித்த திமுக அரசை வரும் தேர்தலில் மக்கள் அடியோடு துடைத்தெறிவது நிச்சயம் என்பதை மட்டும் இந்நேரத்தில் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு டேக் செய்து வலியுறுத்தியுள்ளார்.

