மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. நாளை தமிழகத்திற்கு பிரதமர் மோடி வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை இறுதியாக ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளாக, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்துக்கு எழுதிய கடிதங்கள், பாராளுமன்றத்தில் எழுப்பிய விவாதங்கள் மற்றும் நேரடி சந்திப்புகள் மூலம் நாங்கள் பலமுறை தொடர்ந்து முன்வைத்து வந்த நீண்டநாள் கோரிக்கையே இது.
பல ஆண்டுகளாக கோரிக்கைகளும் நினைவூட்டல்களும் சென்ற பிறகே இப்போது இந்த ஒப்புதல் வந்துள்ளது — அதுவும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வந்திருப்பது கவனிக்கத்தக்கது.
இருப்பினும், இது மதுரை மக்களுக்கும் தென் தமிழ்நாட்டின் முழுப் பகுதிக்கும் ஒரு முக்கியமான முன்னேற்றமான படியாகும்.

மேம்பட்ட இணைப்பு சுற்றுலா, வர்த்தகம் மற்றும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும். இறுதியாக இது நடந்துவிட்டது.
மாண்புமிகு மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர்ராம் மோகன் நாயுடு அவர்களுக்கு நன்றி. இதற்காக ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

