இளைஞர் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணை பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை முக்கிய தகவல் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் விசாரணைக்காக கைது செய்யப்பட்ட இளைஞர் ஆகாஷ் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது.
காவல் துறையின் பாதுகாப்பில் இருக்கும் ஒரு குடிமகனின் உயிர் பறிபோவது சமூகத்தில் பதட்டத்தை ஏற்படுத்தும் சம்பவமாகும். ஒரு நபர் காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பவரின் உயிர் மற்றும் மனித உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும் என்பது சட்டத்தின் பொறுப்பாகும்.
எனவே, இந்த சம்பவத்தின் உண்மை நிலை முழுமையாக வெளிச்சத்துக்கு வரவேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு அரசு இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்துள்ளது ஆறுதல் அளிக்கிறது. சிபிசிஐடி விசாரணையில் உயிரிழப்பின் உண்மை தன்மை வெளிப்படும். சிபிசிஐடி விசாரணையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வரவேற்கிறேன்.

இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்த இளைஞர் ஆகாஷின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

