வாகனத்தவனுக்கு பணம் கொடுக்காததால் என்ஜினியரிங் மாணவறை குத்திக் கொண்ட இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
கொடைக்கானலைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர், கோவை துடியலூர் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டே, பகுதிநேர இன்ஜினியரிங் படித்து வந்தார். இவருடைய சிறுவயது நண்பர்களான அஜித்குமார் மற்றும் பிரவீன்குமார் ஆகியோரும் கோவையில் தங்கி வேலை பார்த்து வந்தனர். நண்பர்கள் என்ற அடிப்படையில் பார்த்திபன் அவர்களுக்குப் அவ்வப்போது பண உதவி செய்து வந்துள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி, தனது மோட்டார் சைக்கிள் தவணைத் தொகையைச் செலுத்த பணம் கேட்டு அஜித்குமார் பார்த்திபனை அழைத்துள்ளார். அப்போது தன்னிடம் பணம் இல்லை என்று பார்த்திபன் கூறியதால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அஜித்குமாரும் பிரவீன்குமாரும் இணைந்து பார்த்திபனை கத்தியால் குத்திக் கொலை செய்தனர்.
இது குறித்து துடியலூர் போலீசார் கொலை வழக்கு மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். கோவை வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில்,இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி விவேகானந்தன், குற்றம் சாட்டப்பட்ட அஜித்குமார் மற்றும் பிரவீன்குமார் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் ஆஜராகி வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

