திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதியில் 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை தொடர்பான வழக்கில், இன்று அதிரடி தீர்ப்பு வெளியாகியுள்ளது. மூன்று இளைஞர்களுக்குச் சிறை தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம், காங்கயம் அமராவதி நகரைச் சேர்ந்த ஜெரின் என்ற பனியன் தொழிலாளி, 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார். அச்சிறுமியை மூணாறுக்கு அழைத்துச் சென்று சட்டவிரோத திருமணம் செய்ததோடு, பல்வேறு அத்துமீறல்களிலும் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், காங்கயம் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. சிறுமி வேலைக்குச் சென்ற இடத்தில், எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த மைக்கேல் ரீகன் என்பவர் அவரிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதும் அம்பலமானது.
அதேபோல், சிறுமியின் முன்னாள் நண்பரான காங்கயம் வீராணம்பாளையத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவர், சிறுமியின் புகைப்படங்களை இணையதளத்தில் பரப்பி விடுவதாக மிரட்டி, அந்தச் சிறுமிக்குத் தொடர் அச்சுறுத்தல்களை விடுத்து வந்ததும் போலீஸ் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி கோகிலா அவர்கள், நேற்று மிகக் கடுமையான தீர்ப்பை வழங்கியுள்ளார். சிறுமியை மிரட்டி அத்துமீறலில் ஈடுபட்ட சிவகுமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 11 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும், இந்தக் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த ஜெரின் மற்றும் மைக்கேல் ரீகன் ஆகிய இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அரசுத் தரப்பில் வழக்கறிஞர் ஜமீலா பானு ஆஜராகி வாதாடிய இந்த வழக்கில், குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட இந்தத் தண்டனை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

