பெரும்பாலான வீடுகளில் இட்லி, தோசை தான் டிபன் ஆக இருக்கும். அதற்கு எப்போதும் தக்காளி சட்னி, தேங்காய் சட்னி போன்றவற்றை செய்வோம்.
ஆனால், இந்த ஒரு முறை இந்த தண்ணி சட்னியை செய்து பாருங்கள். சட்னி செய்வதற்கு வெங்காயம், தேங்காய், தக்காளி போன்றவற்றில் ஏதாவது, ஒன்று தேவைப்படும். ஆனால், இந்த மூன்றுமே இல்லாமல் ஒரு அருமையான சட்னியை செய்யலாம்.
தேவையான பொருட்கள்
ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய்
எட்டு பல் பூண்டு
மூணு டேபிள் ஸ்பூன் பச்சை வேர்க்கடலை
ரெண்டு டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு
இரண்டு டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
ஐந்து வரமிளகாய்
ஒரு கொத்து கருவேப்பிலை
இரண்டு டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை
சிறிய துண்டு புளி
சுவைக்கேற்ப உப்பு
தேவையான அளவு தண்ணீர்
தாளிப்பதற்கு
இரண்டு டீஸ்பூன் எண்ணெய்
½ டீஸ்பூன் கடுகு
ஒரு டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
ஒரு வரமிளகாய்
ஒரு கொத்து கருவேப்பிலை

செய்முறை
Step 1:முதலில் ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து அதில், ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடானதும், பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதன் பின்னர், ஒரு தட்டில் எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
Step 2:பின்னர் அதே கடாயில் பச்சை வேர்க்கடலை சேர்த்து, நன்கு வறுக்க வேண்டும். அதன் பின்னர், அதில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து நன்கு பொன்னிறம் மாறும்வரை வறுக்க வேண்டும்.
Step 3:பிறகு அதில், வர மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வறுக்க வேண்டும். அடுத்து அதில் பொட்டுக்கடலை சேர்த்து ரெண்டு நிமிடம் வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
Step 4:பின்னர் மிக்ஸர் ஜார் அல்லது ஆட்டுக்கல்லில் இந்த வறுத்த பொருட்களை சேர்த்து அத்துடன் புளி மற்றும் உப்பு சேர்த்து ஒரு முறை அரைத்துக் கொள்ள வேண்டும்.
Step 5:பின்பு சிறிது நீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்து தண்ணீர் சட்னிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
Step 6: இறுதியாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றியதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை, வரமிளகாய் போன்றவற்றை சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை அற்புதமாக இருக்கும்.
Step 7:இப்பொழுது வெங்காயம், தக்காளி, தேங்காய் சேர்க்காத தண்ணீர் சட்னி தயார்.

