தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில், மதுரையில் தேர்வு எழுதச் சென்ற மாணவி ஒருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஆவியூரைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகள் துர்காதேவி. 17 வயதான இவர், மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்தார். இன்று பொதுத்தேர்வு தொடங்குவதை முன்னிட்டு, ஆவியூரிலிருந்து தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் மதுரை காமராஜர் சாலையில் உள்ள தேர்வு மையத்திற்குச் சென்று கொண்டிருந்தார்.
வலையங்குளம் சாலை, அல்லிக்குளம் பகுதி அருகே அவர்கள் வந்துகொண்டிருந்தபோது, மதுரையை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில், இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த மாணவி துர்காதேவி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கண்களில் கனவுகளுடன் தேர்வு எழுதச் சென்ற மகள், தந்தை கண்ணன் கண்முன்னேயே சடலமான நிகழ்வு அங்கிருந்தவர்களைக் கலங்கச் செய்தது. தகவலறிந்து வந்த பெருங்குடி போலீசார், மாணவியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்வு எழுதச் சென்ற மாணவி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.

