நடிகரும், தவெக தலைவருமான விஜய், அரசியலில் நுழைந்தது முதல் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகின்றார். 2026 தேர்தல் வருவதற்குள் மாதம் மாதம் அவர் சந்தித்த நல்லது, கெட்டது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..
தவெக தலைவர் கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி கரூர் மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

அந்த சம்பவம் நடந்தேறிய போது, உடனே விஜய், விமானத்தில் சென்னைக்கு பறந்து விட்டார். இது கடும் விமர்சனங்களை சந்தித்தது. மேலும் விஜய்க்கு மனிதாபிமானமே இல்லை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் பார்க்க கூட மனம் இல்லை என விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.
தொடர்ந்து அக்டோபர் மாதம் 27ஆம் தேதி, கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர்களின் குடும்பத்தினரை பனையூர் அலுவலகத்திற்கு வர வைத்து அவர் சந்தித்து பேசினார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காசோலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.
அடுத்த மாதமான நவம்பர் 27ஆம் தேதி, யாரும் எதிர்பாராத வகையில் தவெகவுக்கு சாதகமான சூழல் ஏற்பட்டது. அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், கோபிசெட்டிப்பாளையம் எம்எல்ஏவுமான செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார்.

கொங்கு மண்டலத்தின் பெரும் ஆதரவாளர்களை தன் பக்கம் வைத்துள்ள செங்கோட்டையன், அதிமுக மீது அதிருப்தி தெரிவித்து, எம்எல்ஏ பதவியை ராஜினமாவும் செய்தார். இது தமிழக அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது விஜய்க்கு சாதகமாகவும் பார்க்கப்பட்டது.
பின்னர் டிசம்பர் 27ஆம் தேதி மலேசியாவில் பிரம்மாண்டமாக நடந்தது ஜனநாயகன் ஆடியோ வெளியீட்டு விழா. விஜய் தீவிரமாக அரசியலில் நுழைந்த நிலையில், தனது கடைசி படம் ஜனநாயகன் என அறிவித்ததால், ஜனநாயகன் படத்துக்கு ரசிகர்கள் மிக எதிர்பார்ப்பில் காத்திருந்தனர்.

ஆடியோ வெளியீட்டு விழா தமிழகத்தில் நடத்த திட்டமிட்ட நிலையில், கரூர் சம்பவம் போல நடந்துவிடக் கூடாது என்பதற்காக மலேசியாவில் ஆடியோ வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தியது தயாரிப்பு நிறுவனம்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாக வேண்டிய படம் வெளியாகததால் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்தன. படத்துக்கு சென்சார் கிடைக்காததால் தயாரிப்பு நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த தனி நீதிபதி, யுஏ சான்றிதழ் அளித்தது. ஆனால் தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்து அதை நிறுத்தியது.

ஜனவரி 27ஆம் தேதி தனி நீபதியின் உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வு ரத்து செய்தது. உத்தரவு பிறப்பிக்கும் முன், Central Board of Film Certification (CBFC) தனது பதிலை தாக்கல் செய்ய வாய்ப்பு வழங்கப்பட வேண்டியிருந்தது என நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
இதன் விளைவாக, இந்த வழக்கு மீண்டும் ஒற்றை நீதிபதியிடம் புதிதாக விசாரணைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதாவது, அந்த நிலைப்பாட்டில் இருந்து சட்ட நடைமுறைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இன்னும் ஜனநாயகன் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.
இதனிடையே நேற்று பிப்ரவரி 27ஆம் தேதி தமிழக அரசியல் வட்டாரத்திலும், ரசிகர்கள், தொண்டர்கள் மத்தியிலும் பரபரப்பை கிளப்பியது விஜய் மனைவி சங்கீதா கோரிய விவாகரத்து வழக்குதான்.
அதுவும் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவால் வந்த பிரச்சனையே என விஜய் மனைவி விவாகரத்து மனுவில் குறிப்பிட்டது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
இப்படி ஒவ்வொரு மாதம் 27ஆம் தேதி விஜய்க்கு ஆதரவாகவும், எதிராகவும் நடந்த நிகழ்வுகள் என்ன சொல்ல வருகிறது. அடுத்த மாதம் 27ஆம் தேதி என்ன நடக்கும்?

விஜய் மீதான தொடர் விமர்சனங்கள் தவெகவின் வளர்ச்சியை பாதிக்குமா? பலப்படுத்துமா? எப்படி விஜய் இதில் இருந்து மீண்டு வருவார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

