டெல்லியில் இருந்து வந்தாலும் சரி, குஜராத்தில் இருந்து வந்தாலும் சரி, எங்கிருந்து வந்தாலும் தமிழ்நாட்டில் பருப்பு வேகாது என செந்தில் பாலாஜி பேச்சு.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வர இருக்கும் சட்டசபை தேர்தலுக்கான திமுக தேர்தல் அலுவலகத்தை முன்னாள் அமைச்சரும் கோவை மண்டல பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி திறந்து வைத்தார்.
பின்னர் தொண்டர்களிடம் பேசும் பொழுது, உறுதியாக சொல்கிறேன், மேட்டுப்பாளையத்தில் நமது ஆட்சி தான், எப்பவும் நாம் தடுப்பு ஆட்டத்திற்கு போகக்கூடாது, அடித்து ஆட வேண்டும்.

முதல் அடி நம்ம அடியாக இருக்க வேண்டும், இது வேற அடி என்று தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று நகைச்சுவையாக் கூறினார்.
எப்படி எங்களுக்கு இவ்வளவு தைரியம் வந்தது என்று சிலர் சொல்லலாம். அது முதலமைச்சர் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை, துணை முதலமைச்சர் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை.

தமிழ்நாட்டை காப்பாற்ற உரிய தகுதி படைத்த ஒரே தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான். டெல்லியில் இருந்து வந்தாலும் சரி, குஜராத்தில் இருந்து வந்தாலும் சரி, எங்கிருந்து வந்தாலும் சரி, அல்லது சேலத்தில் இருந்து வந்தாலும் சரி இங்கு பருப்பு வேகாது தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி தான் அமையும் என்று பேசினார்.

