இந்தியாவின் தொழில்நுட்ப முன்னேற்றத்தை உலகிற்கு பறைசாற்றும் வகையில், டெல்லியில் உலக செயற்கை நுண்ணறிவு மாநாடு நடைபெற்று வருகிறது. இதனிடையே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் அரை நிர்வாணமாக இந்த மாநாட்டு வளாகத்திற்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.
நாட்டின் நற்பெயரைக் குலைக்கும் வகையிலான இந்தச் செயலைக் கண்டித்து, புதுச்சேரி மாநில பாஜக இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மாநில இளைஞரணித் தலைவர் ஆடலரசன் தலைமையில், புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் எதிரே திரண்ட பாஜகவினர், காங்கிரஸ் கட்சிக்கும் ராகுல் காந்திக்கும் எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின் உச்சகட்டமாக, பாஜக இளைஞரணியினர் தாங்கள் கொண்டு வந்திருந்த ராகுல் காந்தியின் உருவபொம்மைக்குத் தீ வைத்து எரித்துத் தங்களின் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் வாசல் முன்பே இந்த உருவபொம்மை எரிக்கப்பட்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.

