2016ஆம் ஆண்டு முதல் அதிமுக ஆட்சி காலத்தில் சபாநாயகராக இருந்தவர் தனபால். இவருடைய மகன் லோகேஷ் அதிமுகவில் எம்ஜிஆர் இளைஞரணி மாநில செயலாளராக உள்ளார்.
அவிநாசி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராகவும், அவிநாசி அதிமுக ஐடி பிரிவிலும் உள்ளார். இவர் சொந்தமாக ஐடி கம்பெனியை நடத்தி வருகிறார்.
கடந்த 2024ல் நடந்த மக்களவை தேர்தலில் நீலகிரி தொகுதியில் அதிமுக சார்பாக லோகேஷ் போட்டியிட்டு 3வது இடம் பிடித்திருந்தார். முதல் இடத்தை திமுக எம்பி ஆ.ராசாவும், 2ஆம் இடத்தை பாஜக எல்.முருகன் பிடித்திருந்தார்.
கிட்டத்தட்ட எல். முருகனுக்கும், அதிமுக சார்பாக போட்டியிட்ட லோகேஷ்க்கு 12,000 வாக்குகள் வித்தியாசம். இந்த நிலையில் தவெகவில் இணைந்துள்ளார் முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ்.

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விருப்ப மனு அளித்த நிலையில், 2 மாதத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றி திடீரென தவெகவில் இணைந்துள்ளார்.
அவிநாசி தொகுதி எப்போதும் அதிமுக கோட்டையாகவே உள்ளது. அந்த தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்த லோகேஷ், திடீரென தவெகவில் இணைந்திருப்பது அதிமுக மூத்த தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் செங்கோட்டையன் என்றும், ஏதோ சில காரணங்களால் அதிருப்தியில் உள்ள லோகேஷை செங்கோட்டையன் தட்டி தூக்கியதாகவும் கூறப்படுகிறது.

