கோவை புலியகுளத்தில் இன்று காலை பள்ளி வாகனம் மோதி வாலிபர் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரியைச் சேர்ந்தவர் அக் க்ஷய் குமார் (வயது 24). இவர் காளப்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இதற்காக ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார்.
தினமும் மோட்டார் சைக்கிளில் காளப்பட்டிக்கு அக்ஷய குமார் சென்று வருவார். இன்று காலை வழக்கம்போல அக்க்ஷய் குமார் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டார். புலியகுளம் அருகே ரெட்பீல்ட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே சென்ற போது திடீரென மோட்டார் சைக்கிள் தறுக்கியதால் அக்ஷய் குமார் கீழே விழுந்தார்.
அப்போது, அந்த வழியாக அதே பகுதியில் உள்ள பள்ளிக்கு மாணவ – மாணவிகளை ஏற்றுக் கொண்டு தனியார் பள்ளி வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் கீழே விழுந்த அக்ஷய் குமார் மீது பஸ்ஸின் சக்கரங்கள் ஏறி இறங்கியது.
இதில், அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அக்ஷய் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதை அடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குறுகலான சாலையில் ஏற்பட்ட இந்த விபத்தால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

