தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்கள் கூட முழுமையாக இல்லை.. எப்போது வேண்டுமானாலும் தேர்தல் தேதி அறிவிக்கலாம்
இதனால் தமிழக அரசியல் கட்சிகள் படுசூடாக தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். திமுக மீண்டும் ஆட்சியமைக்க பணியாற்றும் சூழலில், அதிமுக பாஜகவுடன் கூட்டணி போட்டு தேர்தலை சந்திக்க உள்ளது.
ஒரு பக்கம் வேட்பாளர் தேர்வு, கூட்டணி பேச்சுவார்த்தை என நடந்து வரும் நிலையில், நாதக, தவெக தனியாக போட்டியிட உள்ளது. ஆனால் தேமுதிக தங்களுடைய நிலைப்பாட்டை தெரிவிக்காமல் இருந்து வந்தது.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன் ஈஷா யோகா மையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலமணியுடன் பிரேமலதா சத்குருவை சந்தித்தது கூட்டணிக்கான அடித்தளம் என பேசப்பட்டது.
அதிமுக பாஜக கூட்டணியில் தேமுதிக இணைய பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த நிலையில், இன்று அண்ணா அறிவாலயத்தில் தேமுதிக பொதுச்செயாலளர் பிரேமலதா, முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து கூட்டணியை அறிவித்துள்ளார்.
இது தமிழக அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2016 தேர்தலின் போது திமுகவுடன், தேமுதிக கூட்டணி அமைக்கும் என முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எண்ணியிருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, பழம் நழுவி பாலில் விழும் என நம்பிக்கையாக சொன்னார். ஆனால் கடைசியில் கேப்டன் தனது நிலைப்பாட்டை மாற்றினார்.
ஆனால் 2026ல் ஸ்டாலினின் வியூகம் பலித்துள்ளது. தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி போடும் என எண்ணியிருந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து கூட்டணி அமைத்துள்ளார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா.

