கோவை மக்களை இழிவாக பேசிய தயாநிதி மாறனும், ரசித்து சிரித்து கேட்ட செந்தில் பாலாஜியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என வானதி சீனிவாசன் எம்எல்எ வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், கோவை மக்களை மலினமாக பேசிய திரு. தயாநித மாறன் அவர்களும், அந்த இழிபேச்சை மேடையில் சிரித்து ரசித்த திரு.
செந்தில்பாலாஜி அவர்களும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!
திமுக கட்சி நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதி மாறன் அவர்கள் கோவை மக்களைக் குறித்து மலினமாகப் பேசியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
பாசத்திற்கும் பண்புக்கும் பேர் பெற்று, பொருளாதார வளர்ச்சியில் உச்சங்கொண்டு, தேடி வருவோரையெல்லாம் வாழ வைக்கும் தமிழகத்தின் தலைசிறந்த தொழில் நகரத்தைக் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல், வாய்க்கு வந்தபடி மலினமாகப் பேசி சிரிப்பதை என்றும் ஏற்றுக் கொள்ள முடியாது.

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் என்பதைத் தாண்டி, கோவை மண்ணின் மகளாகச் சொல்கிறேன்! கோவை மக்களை இழிவாகப் பேசிய திரு. தயாநிதி மாறன் அவர்களும், அந்த கொச்சைப் பேச்சை மேடையில் இருந்தபடியே சிரித்து வெகுவாக இரசித்த திரு. செந்தில் பாலாஜி அவர்களும் உடனடியாக கோவை மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!
ஆதிகாலந்தொட்டே மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்டு, கோவை மீது வெறுப்பை உமிழ்ந்து வரும் திமுகவுக்க, வரும் தேர்தலில் மிகப்பெரும் தோல்வியைப் பரிசளிப்பர் கோவை மக்கள்! அப்போது தெரியும் கோவை மக்களின் அருமை! என வானதி சீனிவாசன் பதிவிட்டுள்ளார்.

