மதுரையை மையமாகக் கொண்டு செயல்பட்ட மு.க.அழகிரியின் முக்கிய ஆதரவாளரான பி.எம். மன்னன் இன்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) கட்சியில் இணைந்தார்.
ஒருகாலத்தில் “மதுரை திமுக” என்றாலே அழகிரியின் கோட்டை எனப் பேசப்பட்ட நிலையில், கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்ட பிறகு அந்த ஆதிக்கம் குறைந்தது. அந்த காலகட்டம் முழுவதும் அவரின் நெருங்கிய ஆதரவாளராக இருந்தவர் மன்னனே.
2014ஆம் ஆண்டு, கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.கருணாநிதி, அழகிரியை கட்சியில் இருந்து நீக்கினார். அப்போதும் அவருடன் இருந்து ஆதரவு தெரிவித்தவர் மன்னன் தான்.
கடந்த வாரம் முதலே அவர் அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதன் தொடர்ச்சியாக, இன்று தனது ஆதரவாளர்களுடன் மன்னன் அதிமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.

நீண்ட நாட்களாக அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தரப்பில் இருந்து அழைப்புகள் வந்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், திமுகவில் சேரும் விருப்பத்தையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார். இதை மு.க.ஸ்டாலின் அவர்களிடமும் தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் திமுக தரப்பில் இருந்து எந்தவிதமான சாதகமான பதிலும் வராததால், இறுதியில் அதிமுகவில் இணைந்ததாக கூறப்படுகிறது.

