வேலூர் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் பாரம்பரிய மயான கொள்ளை திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, கழிஞ்சூர் பகுதியில் இருந்து சுமார் 60 அடி உயரம் கொண்ட பிரமாண்ட தேர், வாகனத்தின் மீது அமைக்கப்பட்டு பாலாற்றை நோக்கி விருதம்பட்டு மேம்பாலம் வழியாக எடுத்துச் செல்லப்பட்டது.
பாலாற்றில் நடைபெற்ற சூறை மற்றும் சிறப்பு பூஜைகள் நிறைவடைந்த பின்னர், தேரை மீண்டும் கழிஞ்சூர் பகுதிக்கு கொண்டு செல்லும் பணிகள் தொடங்கின. அப்போது எதிர்பாராத விதமாக தேர் ஓட்டுநர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது இதனால் தேர் திடீரென இடதுபுறமாக சாய்ந்து கவிழ்ந்தது.
இந்த விபத்தில் தேரின் மீது அமர்ந்திருந்த பக்தர்களும், அருகில் நின்று விழாவைக் கண்டுகொண்டிருந்த பொதுமக்களும் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அப்பகுதி மக்களின் உதவியுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
விபத்தில் ஒருவர் பலத்த காயமடைந்தார். மேலும் 6 பேர் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தேர் மரம் மற்றும் பேப்பர் போன்ற இலகு பொருட்களால் செய்யப்பட்டிருந்ததால் பெரிய அளவிலான உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி விரைந்து வந்து, விபத்துக்கான காரணங்கள் குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அப்போது பொதுமக்கள், சாலை வசதிகள் முறையாக ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும், அதிகாரிகள் போதிய வழிகாட்டுதல் வழங்கவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.
இதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர், இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
மேலும், இந்த விபத்தில் பெரும் உயிர் சேதம் ஏதும் ஏற்படாததால், பொதுமக்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வீடு திரும்புமாறு கேட்டுக்கொண்டார்.
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவிழா நடைபெற்ற பகுதியில் இந்த விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

