விஜய் முதலில் திரிஷா வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியது அரசியலில் சர்ச்சையை கிளப்பியது.
பல அரசியல் கட்சி தலைவர்கள் நயினார் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், திமுகவும் ஒரு பெண்ணை அரசியலுக்குள் இழுத்து பேசுவது அநாகரிகமான செயல் என கூறியது.
இதையடுத்து நடிகை திரிஷாவும், இன்று கண்டன அறிக்கையை வெளியிட்டார். தான் எந்த கட்சியுடனும் தொடர்பில்லை, ஒரு தலைவர் இப்படி பேசியது அருவருக்கத்தக்கது என கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், என்னுடைய அரசியல் வாழ்க்கையில் எந்த ஒரு தனிநபர் விமர்சனத்தை நான் அனுமதித்ததில்லை, நானும் அப்படியிருந்ததில்லை, வாய் தவறி விழுந்த வார்த்தை.

வானதி சீனிவாசன் கூட என்னிடம் பேசியிருந்தார். நேற்று அண்ணாமலை வீட்டுக்கு நான் சென்றிருந்த போதும் அவரும் இது பற்றி பேசியிருந்தார்.
உண்மையில் யாரேனும் இதில் வருத்தப்பட்டிருந்தால் எனது மனப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறினார். நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்த 3 மணி நேரத்தில் நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

