விஜய் மல்லையா இந்த பெயர் எப்போதும் இந்திய அரசியலில் பேசு பொருளாகவே இருந்து வருகிறது. இந்தியாவின் முக்கிய தொழிலதிபரான விட்டல் மல்லையாவின் மகன் தான் இந்த விஜய் மல்லையா. அவர்களின் குடும்ப நிறுவனமான யூனிட் ஹோல்டிங் நிறுவனத்தின் CEO பொறுப்பு இவருக்கு 28 வயதிலேயே கிடைத்தது. அந்த பொறுப்பை இவர் மிகச் சிறப்பாக கையாண்டார் என்றே சொல்லலாம். ஆனால், விஜய் மல்லையாவின் சரிவு தொடங்கிய காலம் கிங் பிஷர் விமான நிறுவனத்தால் என்று கூறலாம்.

இந்நிலையில், பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் 9000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்தாமல் மோசடி செய்ததாக பல வழக்குகள் தொடரப்பட்டன.
இதையடுத்து, 2016-ல் விஜய் மல்லையா ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு தப்பி சென்று விட்டார். முன்னதாக கடந்த 2019-ல் தப்பியோட பொருளாதார குற்றவாளியாக விஜய் மல்லையா அறிவிக்கப்பட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், குற்றவாளிகள் சட்டத்தை எதிர்த்தும் தன்னை பொருளாதார குற்றவாளியாக அறிவித்ததை எதிர்த்தும் விஜய் மல்லையா இரு மனுக்களை மும்பை ஹை கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்களை மும்பை ஹை கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசேகர் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் எனில், தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா நாடு திரும்ப வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தார்கள்.

இந்நிலையில், விஜய் மல்லையா கண்டிப்பாக நாடு திரும்ப வேண்டும். அவர் நாடு திரும்பவிட்டால், இந்த மனுவை விசாரிக்க மாட்டோம் என்று நீதிபதிகள் காட்டமாக தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, விஜய் மல்லையா நீதிமன்ற நடவடிக்கைகளை தவிர்க்கிறார் என்றும், வேண்டுமென்றே நீதிமன்ற நடவடிக்கை புறக்கணித்துவிட்டு நிவாரணம் கோர முடியாது எனவும், இந்த மனுவை நாங்கள் தள்ளுபடி செய்யவில்லை பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையாவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குகிறோம் என்றும், விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

