பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் பத்தாவது நாளாக தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் நாள்தோறும் அங்கேயே படுத்து உறங்கி சமையல் செய்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
காலமுறை ஊதியம், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், இளநிலை உதவியாளர் நிலையில் 16,500 ரூபாய் வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பத்தாவது நாள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டு அறிந்தார்.

அப்போது அவர்கள் நயினார் நாகேந்திரனிடம் தங்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு இரண்டும் சேர்ந்துதான் நிதி ஒதுக்குவதாகவும், அப்படி இருக்கும் பொழுது மாநில அரசு தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாத பட்சத்தில் மத்திய அரசாவது எங்களது கோரிக்கைகளை ஏற்று நிதியை ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
மாநில அரசிடம் கேட்டால் மத்திய அரசிடம் கேளுங்கள் எனக் கூறுகிறார்கள் மத்திய அரசிடம் கேட்டால் மாநில அரசிடம் கேளுங்கள் என்று கூறுகிறார்கள் என்று தெரிவித்த அங்கன்வாடி ஊழியர்கள் இப்படி இரண்டு அரசுகளும் தங்களை அலைக்கழித்தால் நாங்கள் எங்கு செல்வது என கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன் உங்களுக்கு தேர்தல் வாக்குறுதி கொடுத்தது திமுக அரசு தான் அவர்களிடம் தான் நீங்கள் முறையிட வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் நாங்கள் இதர அரசியல்வாதிகள் போன்று இல்லை நாங்கள் சொன்னதை செய்வோம் எனவும் கூறினார். மேலும் இது குறித்து வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரிலும் பேசுகிறோம் எனவும் பதிலளித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் இது குறித்து அவரிடம் கேள்விகள் எழுப்பிய நிலையில் பதிலளிக்காமல் புறப்பட்டு சென்றார். இந்த நிகழ்வில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் பாஜக மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

