கோவை மாவட்டம் சின்னதடாகம் பகுதியை சேர்ந்தவர் பரத்ராஜ்(29). இவர் தனியார் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் மேனேஜராக பணியாற்றி வருகிறார்.
இவரது நண்பர் ஆதித்யா சிங்காநல்லூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார். மற்றொரு தோழி சங்கீதா பன்னிமடை பகுதியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று பரத்ராஜ் மற்றும் ஆதித்யா ஆகிய இருவரும் சங்கீதாவின் இல்லத்திற்கு சென்று விட்டு பின்னர் மூன்று பேரும் நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் ஆதித்யாவின் இல்லத்திற்கு காரில் புறப்பட்டுள்ளனர். பரத்ராஜ் காரை ஓட்டி சென்றுள்ளார்.
அப்பொழுது தடாகம் -கணுவாய் சாலையில் அதிவேகமாக காரை இயக்கியதாக தெரிகிறது. அந்நிலையில் காளையனூர் அருகே பரத்ராஜின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் உள்ள பனை மரத்தின் மீது மோதி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் தலையில் காயம் அடைந்த பரத்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சங்கீதா மற்றும் ஆதித்யாவிற்கு காயங்கள் ஏற்பட்ட நிலையில் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சங்கீதா முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். ஆதித்யா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.பரத்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள தடாகம் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

