தனியார் ஆங்கில செய்தி தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 அல்லது 3 மாதங்களே உள்ளன. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம் என 5 மாநில தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் பம்பரம் போல தீவிர தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் தேர்தல் காய்ச்சல் பரவி வரும் நிலையில், தனியார் பிரபல ஆங்கில ஊடகத்தின் சார்பாக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த விவாத நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா பங்கேற்றார். வழக்கம் போல காரசாரமாக பதில் சொல்லிக்கொண்டிருந்த ஹெச் ராஜாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது.
முதலுதவி கொடுத்தும் முன்னேற்றம் ஏற்படாததால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்த கொதிப்பு மற்றும் முடக்கு வாதம் காரணமாக ஹெச் ராஜா பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதனால் ஹெச் ராஜா குடும்பத்தினர் மற்றும் பாஜகவில் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மேலும் அவர் பூரண நலம் பெற வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில் ஹெச் ராஜாவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் அட்மின் போட்ட பதிவு வைரலாகி வருகிறது

அதில், திரு.H.ராஜா ஜி அவர்கள் நேற்றைய தினம் NDTV விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது எதிர்பாராதவிதமாக உடல்நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தால் உடனடியாக சென்னையிலுள்ள பாலாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் சென்னை கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இன்னும் ஓரிரு தினங்கள் மருத்துவ சிகிச்சை பெற்று இறைவன் அருளால் பூரண குணமடைந்து நலமோடு வீடு திரும்புவார். மேலும் திரு.H.ராஜா ஜி அவர்கள் மருத்துவ சிகிச்சையில் இருப்பதால் அவரது அலைபேசி எண்ணிற்கு தேசபக்த உறவுகள் சில தினங்களுக்கு தயவுசெய்வு அழைக்கவேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். TEAM HR என பதிவிடப்பட்டுள்ளது.

