கோவை, குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார். புதிய தமிழகம் கட்சியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கிராமப்புறங்களில் தொடர்ச்சியான பரப்புரை மேற்கொண்டு வருவதாக கூறினார்.
கடந்த 7ஆம் தேதி மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் மாபெரும் மாநாடு நடைபெற்றதாகவும், அந்த மாநாட்டில் 80 பேர் கொண்ட குழுவின் கருத்துகளின் அடிப்படையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் நினைவுபடுத்தினார்.

தேர்தல் அறிவிப்புக்கு முன்பே அரசியல் சூழலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட டாக்டர் கிருஷ்ணசாமி, சில ஊடகங்களில் புதிய தமிழகம் கட்சியின் நிலைப்பாடு குறித்து தவறான செய்திகள் வெளியாகி வருவதாக குற்றம்சாட்டினார்.
2026 சட்டமன்ற தேர்தலை புதிய தமிழகம் கட்சி கொள்கை ரீதியாக எதிர்கொள்ளும் என்றும், நல்ல ஆட்சியை அமைக்கும் கூட்டணியுடன் இணைவோம் என்றும் தெரிவித்தார்.புதிய தமிழகம் எந்த கூட்டணியில் உள்ளது என்ற செய்திகள் அனைத்தும் வதந்திகள் என்றும், ஒரு வார காலத்திற்குள் கூட்டணி குறித்து முடிவு அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

விஜயுடன் கூட்டணி அமைப்பதா என்ற கேள்விக்கு, தங்களது கொள்கைகளுடன் ஒத்த கருத்து கொண்ட கட்சியுடன் மட்டுமே கூட்டணி அமைப்போம் என்றும், இதுகுறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
தமிழகத்தில் 100 சட்டமன்ற தொகுதிகளில் புதிய தமிழகம் கட்சி வலுவாக உள்ளதாகவும், தென் மாவட்டங்களில் புதிய தமிழகம் கட்சியை தவிர்த்து யாரும் வெற்றி பெற முடியாது என்றும் அவர் கூறினார். இன்று நடைபெறும் NDA கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சி பங்கேற்கவில்லை என்றும், அதனை தெளிவுபடுத்துவதற்காகவே இந்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றதாகவும் தெரிவித்தார்

