அதிமுக ஒன்றிணைய வேண்டும் என குரல் கொடுத்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் விஜய்யின் தவெகவில் இணைந்த அவருக்கு மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுக்கப்பட்டது.
தவெக நிகழ்ச்சிகளில் தொடர்ந்து அவர் பங்கேற்று வந்தார். அடிக்கடி செய்தியாளர்களை சந்தித்து அதிமுக, திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். இந்த நிலையில் அவர் தவெகவில் அதிருப்தியுடன் இருப்பதாகவும், வேறு கட்சிக்கு தாவலமா என்ற யோசனையில் உள்ளதாக பிரபல செய்தித்தாளில் செய்தி வெளியானது.
இந்த செய்தி குறித்து தவெக மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்யைடன் அதிரடியாக மறுத்ததுடன், பிரபல செய்தித்தாள் குறித்து விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் வந்தவன் நான். சோதனை ஏற்பட்ட போது என்னை கரம் பிடித்து அரசியலில் ஒரு வரலாறு படைகின்ற அளவிற்கு இன்று என்னை உருவாக்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி அவர்கள் என்றும் என் நெஞ்சத்தில் நீங்கா இடம் பெற்றவர்.
அவர் 2026 இல் தமிழ்நாடு முதலமைச்சர் ஆகும் வரை நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து மக்கள் செல்வாக்கோடு அவரை ஆட்சி கட்டிலில் அமர வைப்போம். அவருடைய தியாகத்தையும், மனித நேயத்தையும் எவராலும் ஒப்பிட இயலாது. மக்கள் நெஞ்சங்களில் நிறைந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

எங்கள் வாழ்வும், தமிழகத்தின் எதிர்காலமும், அவருடைய தலைமையில் அமையப் போகின்றது. அதற்காகத்தான் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறோம்.
நாளிதழில் உண்மைக்கு மாறான செய்தி வெளியாகி இருப்பது வேதனை அளிக்கிறது. நடு நிலை என்று சொல்லிக்கொண்டு இதுபோன்ற தவறான செய்திகளை வெளியிடுவது பத்திரிகை தர்மத்திற்கு உகந்ததல்ல. இந்த செய்தியை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

