தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே தென்றல் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் (73) என்பவரின் மகள் மோகனப்பிரியா (34), கவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மோகனப்பிரியா ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். பின்னர் விஜயன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். விஜயனும் முன்பு திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் என கூறப்படுகிறது. இருவரும் பெங்களூரில் பணியாற்றி வந்த நிலையில், மோகனப்பிரியா ஐடி நிறுவனத்திலும், விஜயன் தனியார் நிறுவனத்திலும் வேலை செய்து வந்தனர்.
கர்ப்பம் காரணமாக மோகனப்பிரியா பெங்களூரிலிருந்து கணவரின் ஊரான கோவை இடையர்பாளையம் பூம்புகார் நகருக்கு வந்து, வீட்டிலிருந்தபடியே ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவருக்கு குழந்தை பிறந்த நிலையில், அதன் பின்னர் மனஅழுத்தம் மற்றும் பல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 18ஆம் தேதி கணவர் விஜயன் வேலை காரணமாக பெங்களூருக்கு சென்றுவிட்டார். வீட்டில் மோகனப்பிரியா அவரது பெற்றோருடன் தங்கியிருந்தார். நேற்று மோகனப்பிரியாவின் பெற்றோர் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, மோகனப்பிரியா கயிற்றில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து மோகனப்பிரியாவின் தந்தை ராஜேந்திரன் கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை பிறந்து நான்கு மாதங்களுக்குள் பெண் ஐடி ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
