தமிழ் சினிமாவின் உச்சநடிகராக உள்ள விஜய் தீவிர அரசியலில் குதித்துள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில், கரூரில் நடந்த தவெக பிரச்சார கூட்டத்தின் போது நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்.
இந்த நிலையில் இது தொடர்பாக சிபிஐ விசாரித்து வரும் நிலையில், இன்று டெல்லியில் விசாரணைக்காக நேரில் ஆஜராகியுள்ளார் விஜய்.
இந்த நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆதித்தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் அதியமான், விஜய் குறித்து சரமாரி விமர்சனம் செய்துள்ளார்.
அரசியலில் இன்னும் LKG பயிலும் நிலைமையில் உள்ள நடிகர் விஜய், பனையூரின் வரம்புகளைத் தாண்டி பரந்த அரசியல் வெளியில் கால்பதிக்க வேண்டியுள்ளது.
அரசியல் என்பது மேடைகளில் உரையாற்றுவதற்கான இடமல்ல; மக்கள் பாதிக்கப்படும் பிரச்சினைகளில் திடமான நிலைப்பாடு எடுக்க வேண்டிய தளம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இதுவரை ஒரு வார்த்தையும் அவர் பேசவில்லை. அதேபோல், மத்திய அரசு தமிழகத்திற்கான கல்வி நிதியாக வழங்க வேண்டிய ரூ.3,000 கோடியை ஒதுக்காமல் வைத்திருப்பதையும் அவர் கேள்விக்குள் கொண்டுவரவில்லை.
அவரது ‘ஜனநாயகன்’ திரைப்படம் சென்சார் குழுவில் சிக்கியுள்ள நிலையில் கூட அவர் எந்த எதிர்வினையும் வெளிப்படுத்தாதது பலருக்கும் கேள்விக்குறியாக உள்ளது. இப்படிப்பட்ட சூழலில், மக்கள் பிரச்சினைகளுக்காக அவர் எப்படி குரல் கொடுப்பார் என்ற சந்தேகம் எழுகிறது.

‘பராசக்தி’ படத்தில் அறிஞர் அண்ணா பேசிய புகழ்பெற்ற வசனங்களை சென்சார் போர்டு நீக்கியதை தமிழக முதல்வர் கண்டித்திருந்தார். ஆனால் அதே சென்சார் அமைப்பை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேச முடியாத நிலை விஜய்க்கு இருப்பதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டது.
முழுமையான அரசியல்வாதியாக உருவெடுக்க முடியாத நிலையில், அவர் தொடர்ந்து திரைப்படங்களில் மட்டும் கவனம் செலுத்துவது தான் பொருத்தமானதாக இருக்கும் என கூறினார்.

