கோயம்புத்தூர் மாநகர சைபர் கிரைம் போலீசார், குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் பதுங்கியிருந்த 10 சைபர் மோசடி நபர்களை கைது செய்து, ரூ.16.49 லட்சம் மதிப்புள்ள ஆன்லைன் மோசடி வழக்கை முறியடித்துள்ளனர்.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 71 வயதான சாமுவேல் சந்திரபோஸ் என்பவருக்கு, கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி RTO CHALLAN அபராதம் செலுத்த வேண்டும் எனக் கூறி ஒரு APK அப்ளிகேஷன் வாட்ஸ்ஆப்பில் வந்துள்ளது. அதை உண்மை என நம்பிய அவர் அந்த ஆப்பை தனது மொபைல் போனில் பதிவிறக்கம் செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவரது மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டு செயல்பட முடியாத நிலையில் மாறியுள்ளது. அடுத்த நாளில் தொடர்ந்து OTPகள் வந்த நிலையில், அவரது IndusInd வங்கிக் கணக்கில் வைத்திருந்த Fixed Deposit தொகை எடுத்துக்கொள்ளப்பட்டதாக மெசேஜ் வந்துள்ளது. வங்கியை அணுகி சரிபார்த்தபோது, ரூ.16,49,961 ஆன்லைன் மூலம் மோசடியாக எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, 12.09.2025 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், இந்த பணம் 12 தவணைகளாக பல கிரெடிட் கார்டுகளுக்கு மாற்றப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர் என். கண்ணன் மற்றும் துணை ஆணையர் எம்.பி. திவ்யா ஆகியோரின் உத்தரவின்பேரில், சைபர் கிரைம் ஆய்வாளர் அழகராஜ் தலைமையிலான தனிப்படை சூரத்திற்கு விரைந்தது. அங்கு மேற்கொண்ட சோதனையில் 10 சைபர் மோசடி நபர்களை கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ.3.50 லட்சம் பணம், 311 கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், 10 மொபைல் போன்கள், ஒரு ஸ்வைப்பிங் மெஷின் மற்றும் ஒரு காசோலை புத்தகம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், எதிரிகளின் வங்கி கணக்குகளில் இருந்த ரூ.6.39 லட்சம் முடக்கப்பட்டு, நீதிமன்றம் மூலம் பாதிக்கப்பட்ட நபருக்கு திருப்பி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த வெற்றிகரமான நடவடிக்கையை மேற்கொண்ட கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவலர்களை காவல் ஆணையர் கண்ணன் பாராட்டினார்.

