TTV தினகரனுக்கும் இடமில்லை – எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கே தாங்கள்தான் தலைமை வகிப்பதாகவும், வருங்காலத்திலும் அதிமுக தலைமையில்தான் ஆட்சி அமையும் என்றும் உறுதியாகக் கூறினார்.

கூட்டணி என்பது சூழ்நிலைக்கு ஏற்ப அவ்வப்போது அமைக்கப்படும் ஒன்றே என்றும், பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் திமுகவும் ஒரு காலத்தில் இருந்ததாகவும், அதேபோல் அதிமுகவும் இருந்ததாகவும் எடப்பாடி பழனிசாமி நினைவூட்டினார். மேலும், மிசா சட்டத்தின் கீழ் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கைது செய்து சிறையில் அடைத்த காங்கிரஸ் கட்சியுடன்தான் திமுக தற்போது கூட்டணி வைத்துள்ளது என்றும் அவர் விமர்சித்தார்.

எனவே குறை சொல்லுவதற்கு எந்த காரணமும் இல்லாத நிலையில், ஏதாவது காரணத்தை தேடி முதலமைச்சர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.அதிமுக ஆட்சி குறை சொல்ல முடியாத, சிறப்பான ஆட்சி என குறிப்பிட்ட அவர், அதிமுக ஆட்சியில் ஏதேனும் குறை இருந்தால் அதை நிரூபித்து காட்ட முதலமைச்சருக்கு சவால் விடுத்தார்.

இதற்கு மாறாக, திமுக ஆட்சியில்தான் ஊழல் மலிந்து கிடப்பதாகவும், அமலாக்கத்துறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதுதொடர்பான அனைத்து விவரங்களையும் ஆளுநரிடம் மனுவாக அளித்துள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
