கோவை மாநகர் பீளமேடு பகுதியில் நேற்று இரவு வாலிபர் ஒருவர் காரை வேகமாக தாறுமாறாக ஓடியுள்ளார். காரை ஓட்டிய நபர் இருசக்கர வாகனங்கள் மீதும் பக்கவாட்டு சுவர்கள் மீதும் மோதியதாக தெரிகிறது.
எனவே சாலையில் சென்ற இதர வாகன ஓட்டிகள் காரை சுற்றி வளைத்து வாலிபரை தாக்கினர். மேலும் காரின் கண்ணாடிகளையும் உடைத்து, அந்த வாலிபரை வாகனத்தில் இருந்து இறங்க செய்தனர்.

அப்போது அந்த வாலிபர் காரின் மீது ஏறிக்கொண்டு கீழே வாயில் சிகரெட்டை வைத்துக்கொண்டு ரகளையில் ஈடுப்பட்டுள்ளார். இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் அவரை பிடித்து அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். காரையும் பறிமுதல் செய்து பீளமேடு காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

காரை ஓட்டி வந்த இளைஞன் முன்னுக்குப் பின் முரணாக பேசி வந்த நிலையில், அவர் மது போதையில் இருக்கிறாரா அல்லது வேறு ஏதாவது போதை பொருளை பயன்படுத்தி இருக்கிறாரா என்று மருத்துமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.வாலிபரின் ரகளையால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

