வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே உள்ள காட்டுக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன் (43). இவரது மனைவி கலையரசி (33). இவர்களுக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், மூன்று மகன்கள் உள்ளனர்.
கலையரசியின் நடத்தையில் கருணாகரனுக்கு சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கலையரசி உணவு உண்டுவிட்டு தூங்கச் சென்றுள்ளார். ஆனால் மறுநாள் காலை 7 மணியை கடந்தும் கலையரசி தூக்கத்திலிருந்து எழுந்திருக்கவில்லை. எழுப்பிப் பார்த்தபோதும் அசைவின்றி கிடந்ததை கண்டு, கருணாகரன் இதுகுறித்து தனது மனைவியின் தந்தைக்கு தகவல் அளித்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கலையரசியின் பெற்றோர், அவர் உயிரிழந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மகளின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டதால், அவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருணாகரனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கருணாகரன், அதனை தாங்க முடியாமல் அவரை கொலை செய்ய திட்டமிட்டதாக ஒப்புக்கொண்டார்.
நள்ளிரவில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த கலையரசியின் கை, கால்களில் ஒயரின் மூலம் மின்சாரம் பாய்ச்சி கொலை செய்துவிட்டு, காலை உடல் நலக்குறைவால் மனைவி உயிரிழந்ததாக நாடகமாடியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் கருணாகரனை கைது செய்தனர்.

