நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சிங்காரா வனச்சரகப் பகுதியில் இன்று (02.01.2026) அதிகாலை யானை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிங்காரா வனபகுதி, மாயார் சாலை அருகே உள்ள மணி வொர்க் ஷாப் அருகிலுள்ள குழும வீடுகள் பகுதியில் வசித்து வந்த மணிகண்டன் (50), தந்தை குமார், இன்று அதிகாலை சுமார் 5.30 மணி அளவில் தனியாக தேநீர் கடைக்கு சென்று கொண்டிருந்த போது, வனப்பகுதியிலிருந்து வெளியே வந்த காட்டு யானை ஒன்று திடீரென தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
உயிரிழந்த மணிகண்டனின் உடல் உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு (GH) கொண்டு செல்லப்பட்டு, உடற்கூறு பரிசோதனை (Postmortem) மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தையடுத்து, வனத்துறை சார்பில் உடனடி இழப்பீடு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான இறுதி அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, சம்பவ இடத்திற்கு திரண்ட உள்ளூர் மக்கள், குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே உள்ள அடர்ந்த புதர், செடி கொடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மனித–விலங்கு மோதல்களை தடுக்கும் வகையில் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
சூழ்நிலையை கருத்தில் கொண்டு, உள்ளூர் காவல்துறையினர் வனத்துறையினருடன் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, பொதுமக்களை சமாதானப்படுத்தும் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

தொடர்ந்து வன எல்லையோர கிராமங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் காலை மற்றும் இரவு நேரங்களில் தனியாக நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
சமீபத்தில் மனித வன விலங்கு மோதலை தடுக்க கூடலூர் நாடுகாணி ஜீன்புல் பகுதியில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டிருந்தது. இதனால் இனி மனித விலங்கு மோதலே நடக்காது என ஆளும் கட்சி மற்றும் கூட்டணி கட்சியினர் மார் தட்டி வெகு விமர்சையாக விளம்பரம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது

