கோவை, குனியமுத்தூர் நரசிம்மபுரம் ஸ்ரீ ஐயப்பா நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜெபா மார்டின், இவர் அங்கு உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
அரையாண்டு தேர்வுகள் முடிவு அடைந்து விடுமுறை நாள் என்பதால் தனது குடும்பத்துடன் கிறிஸ்மஸ் கொண்டாட உறவினர் வீட்டுக்கு சென்று உள்ளார். இந்நிலையில் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த 104 சவரன் தங்க நகை ரூபாய் 10 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது.
இது குறித்து கோயமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். காவல்துறை விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் தற்பொழுது கோவை சங்கனூர், கண்ணப்பன் நகர் பகுதியில் வசித்து வருகிறார்.

இவர் பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் பூட்டிய வீடுகளை மட்டும் நோட்டம் விட்டு வீட்டில் குடியிருப்பவர்கள் வெளியூர் சென்ற நேரங்களில் கண்காணித்து இரவு நேரங்களில் வீட்டில் கள்ளச் சாவி பயன்படுத்தி கதவை திறந்து பீரோ லாக்கர்களில் கள்ளச் சாவியை பயன்படுத்தி தங்க நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை திருடிக் கொண்டு அவரது கை ரேகைகள் பதியாதவாறு தடயங்களை துணிகளால் துடைத்து அழித்தும் திருடிச் சென்று நகைகளை அடமானம் வைத்து பணத்தை பெற்று தனக்கும் தனது குடும்பத்திற்கும் செலவு செய்துள்ளார்.
இவர் சாய்பாபா காலனியில் இருந்து கடந்த 1993 ஆம் ஆண்டு பம்பாய்க்கு சென்று ஹோட்டலில் சர்வர் வேலை செய்து கொண்டு பிழைப்பு நடத்தி வந்ததாகவும், பம்பாய் ரயில் நிலையத்தில் சூட்கேஸை திருடிய வழக்கில் ஜெயிலுக்கு சென்று வழக்கு முடித்துவிட்டு சென்னைக்கு வந்து பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் தங்க நகைகளை திருடிய வழக்கில் சிறைக்கு சென்று பின்னர் அங்கு இருந்து திருச்சி சென்று திருவெற்றியூர் பேருந்து நிலையத்தில் சூட்கேஸ் திருடியது சம்பந்தமாக திருச்சி சிறையில் இருந்துள்ளார்.

பின்னர் கோவைக்கு வந்து டிரைவிங் வேலை செய்து கொண்டு காரமடை, மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர், சிங்காநல்லூர், சரவணம்பட்டி ஆகிய பகுதிகளில் பல வீடுகளில் திருடி சிறைக்கு சென்றவர் தற்பொழுது குனியமுத்தூரில் உள்ள ஜெபா மார்டின் என்பவர் வீட்டில் கள்ள சாவி பயன்படுத்தி 104 பவுன் தங்க நகைகளை நூதனமாக திருடி சென்றது விசாரணையில் தெரியவந்து உள்ளது.
மேலும் இவர் மீது வேறு ஏதேனும் வழக்குகள் உள்ளதா ? என காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

