தமிழக அரசியலில் திராவிட முன்னேற்றக் கழகமும், பாரதிய ஜனதா கட்சியும் கருத்தியல் ரீதியாக இரு துருவங்களாக செயல்பட்டு வந்தாலும், அக்கட்சிகளின் பெண் தலைவர்கள் இன்று காட்டிய அரசியல் நாகரிகம் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து உள்ளது.
சென்னையில் இருந்து கோவை வந்த ஒரே விமானத்தில் கனிமொழி எம்.பி மற்றும் பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் சந்தித்துக் கொண்ட புகைப்படம் இப்பொழுது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
இன்று தி.மு.க திருப்பூர் மாவட்டம் பல்லடம் காரணம்பேட்டையில் நடைபெறும் நாளை வெல்லும் தமிழ் பெண்கள் என்ற மேற்கு மண்டல மகளிர் அணி மாநாட்டில் பங்கேற்க கனிமொழி எம்.பி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி ஆகியோர் வந்தனர்.பா.ஜ.க மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் நடத்தி வரும் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற அரசியல் பயணத்தின் ஒரு பகுதியாக மலுமிச்சம்பட்டியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வருகை தந்து உள்ளார்.
வெல்லும் தமிழ்ப் பெண்கள்! pic.twitter.com/Dn8StKP36q
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) December 29, 2025
விமானம் பயணத்தின் போது கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் ஆகிய மூவரும் சந்தித்து பேசிக்கொண்டதோடு முகமலர்ச்சியோடு புகைப்படம் எடுத்துக் கொண்டனர், இந்த புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பகிர்ந்த கனிமொழி எம்.பி வெல்லும் தமிழ் பெண்கள் என்று பதிவிட்டு உள்ளார்.
இன்று நடைபெற உள்ள தி.மு.க மகளிர் அணி மாநாட்டில் தலைப்பையே நாளை வெல்லும் தமிழ் பெண்கள் என பா.ஜ.க தலைவருடன் இருக்கும் புகைப்படத்திற்கு கேப்ஷனாக அவர் வைத்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் சுவாரசியமான விவாதங்களை கிளப்பி உள்ளது. அரசியல் மேடைகளில் கடுமையாக விமர்சித்துக் கொண்டாலும், நேரில் சந்திக்கும் போது காட்டும் இந்த நட்புணர்வை நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

