பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர் சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார்.
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் 101-ஆவது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் சிறப்பாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார். நல்லாட்சி தினத்தை முன்னிட்டு, சமூகத்தில் சிறப்பாக பணியாற்றிய 6 அற்புத நபர்களுக்கு விருது வழங்கி கவுரவித்துள்ளதாக கூறினார்.

கிறிஸ்துமஸ் விழா இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டதாகவும், ஆனால் சில இடங்களில் கிறிஸ்துமஸ் விழா தடுத்து நிறுத்தப்பட்டதும், அடித்து உடைக்கும் சம்பவங்களும் நடந்தது துரதிஷ்டவசமானது என்றும் தெரிவித்தார்.
இத்தகைய நிகழ்வுகள் விரும்பத்தகாதவை என்றும், இதை கண்டிப்பதோடு மட்டும் அல்லாமல், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முழு உரிமையுடன் கொண்டாட கிறிஸ்துவ நண்பர்களுக்கு உரிமை உள்ளது; இதனை மற்றவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். பல பிஷப்புகள் நேரடியாக பிரதமரை சந்தித்து பேசிவருவதாகவும் குறிப்பிட்டார்.

சாலை விபத்துகள் தொடர்பாக பேசுகையில், உலகிலேயே விபத்துகள் அதிகம் நடைபெறும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாகவும், நேற்று நடந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தது மிகுந்த வேதனையளிப்பதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்த அவர், அவற்றை தணிக்கை செய்து, தரச்சான்றிதழ் மீண்டும் வழங்க அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
அரசியல் மற்றும் கூட்டணி விவகாரங்கள் குறித்து பேசுகையில், தான் எந்த கூட்டத்திற்கும் செல்லவில்லை என்றும், அதனால் கூட்டணி குறித்து பேசுவது சரியானது அல்ல என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாடு தேர்தல் இன்னும் வெகு தூரத்தில் இருப்பதாகவும் கூறினார். பிரேமலதா பெரும் மதிப்புக்குரியவர் என்றும், ஜனவரியில் தான் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என ஓ.பி.எஸ், தினகரன் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
திமுக குறித்து விமர்சனம் செய்த அண்ணாமலை, தோல்வி பயத்தால் தான் “இன்னும் 100 நாட்களே உள்ளன” என திமுக கூறுவதாக குற்றம்சாட்டினார்.

மத அரசியல் செய்வது யார் என்ற கேள்வியை எழுப்பிய அவர், அனைத்து மத பண்டிகைகளுக்கும் பாஜக வாழ்த்து தெரிவித்து வருவதாக கூறினார். இஸ்லாமிய, கிறிஸ்துமஸ் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் முதல்வர், தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாதது ஏன் என்ற கேள்வியையும் எழுப்பினார்.
சட்டமன்ற தொகுதிகள் மற்றும் தேர்தல் போட்டி குறித்து, “என்ன நடக்கிறது என்பதை பார்த்துக்கொண்டே தான் இருக்கிறோம்” என்றும், எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது டெல்லி பார்த்துக்கொள்ளும் என்றும் தெரிவித்தார். கோவையில் போட்டியிட வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, “டெல்லி பார்த்துக் கொள்ளும்” என பதிலளித்தார்.
காவல்துறை குறித்து பேசுகையில், காவல்துறையினர் பெரும் மனஉளைச்சலில் இருப்பதாகவும், அதில் சில கருப்பு ஆடுகளும் உள்ளதாகவும் தெரிவித்தார். குற்றச்செயல்கள் மீண்டும் நடக்காத வகையில் தண்டனைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

