
உதகையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் வகையில் தனியாா் தொழிற்சாலையில் சாக்லேட் திருவிழா தொடங்கியது.
நீலகிரியின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் நீலகிரி தேன், மலை நெல்லிக்காய், நீலகிரி தேநீர், குறிஞ்சி மூலிகை கல் உப்பு, நீலகிரி மிளகு, நீலகிரி வன காளான் ஆகிய ஆறு சுவைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சாக்லேட்டுகள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
நீலகிரி மாவட்டம், உதகையில் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் அவா்களின் பாரம்பரிய கலாசாரத்தையும், உணவு முறைகளையும் இங்கு அறிமுகப்படுத்தினா். தொடா்ந்து நூற்றாண்டைக் கடந்தும் ஆங்கிலேயா்களின் உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் கலாசாரம் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலேயா்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஹோம்மேட் சாக்லேட் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி உதகையில் உள்ள மக்களிடமும் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் வகையில் உதகையில் உள்ள தனியார் சாக்லேட் தொழிற்சாலையில் சாக்லேட் திருவிழா இன்று தொடங்கியது.
இந்தாண்டு தி கிராண்ட் சாக்லேட் எக்ஸ்ட்ராவாகன்சா 2025 16வது ஆண்டு சாக்லேட் திருவிழா துவங்கியது.
இந்த கண்காட்சியில் நீலகிரியின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் நீலகிரியின் ஆறு சுவைகளை கொண்ட சாக்லேட்டுகள் சுற்றுலா பயணிகளை மெதுவாக கவர்ந்து வருகிறது.
குறிப்பாக நீலகிரி தேன் மற்றும் காட்டுப்பூக்கள், ஊட்டி மலை நெல்லிக்காய், நீலகிரி தேநீர், குறிஞ்சி மூலிகை கல் உப்பு, நீலகிரி மிளகு, நீலகிரி வனக் காளான் ஆகியவற்றை கொண்டும், நீலகிரி மாவட்டத்தின் மண்ணின் மைந்தர்கள் என்று அழைக்கப்படும் தோடர் பழங்குடியின மக்கள் வளர்க்கும் எருமைகளின் பால்களை கொண்டும் சாக்லேட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளது இங்கு வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
மேலும் இந்த கண்காட்சியில் நீலகிரியில் விளையும் காய்கறிகளான கேரட், பீட்ரூட், போன்ற காய்கறிகளைக் கொண்டு கேரட் சாக்லேட், பீட்ரூட் சாக்லேட், ரோஸ்மேரி சாக்லேட் உள்பட 40 வகையான சாக்லேட்கள் தயாரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் குழந்தைகளைக் கவரும் வகையில் பல்வேறு வண்ணங்களில் சாக்லேட்கள் இடம்பெற்றுள்ளன.

இக்கண்காட்சியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களைக் கவரும் வகையில் இந்திய கொக்கோ விவசாயிகளின் வருமானத்தை பலப்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ள சாக்லேட்கள், மூலிகைப் பொருள்களைக் கொண்ட தயாரிக்கப்பட்ட சாக்லேட்டுகள், சா்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய டாா்க் சாக்லேட், ஜிஞ்சா் பில்லிங் சாக்லேட், பெப்பா் ஹனி சாக்லேட்டுகளும் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இவைகளை ஆா்வமுடன் வாங்கிச் செல்கின்றனா்.
உதகையில் தொடங்கியுள்ள இந்த சாக்லேட் திருவிழா கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை ஒட்டி ஜனவரி 4-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
