சூலூர் அருகே செல்போன் திருட்டு விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, வாலிபரை அவரது நண்பர்களே அடித்துக் கொலை செய்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி செல்வலட்சுமி புரம் பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் பரத் (32) என்பவரை, கடந்த 15-ஆம் தேதி இரவு அவரது நண்பர்களான கோகுல், விக்னேஷ் மற்றும் சபரீசன் ஆகியோர் பேச வேண்டும் எனக்கூறி வீட்டிலிருந்து அழைத்துச் சென்றுள்ளனர்.
மறுநாள் காலை அப்பநாயக்கன்பட்டி சுடுகாட்டுப் பகுதியில் உள்ள காத்திருப்போர் அறையில் பரத் பிணமாகக் கிடந்துள்ளார். தகவலறிந்து வந்த சூலூர் போலீசார் நடத்திய விசாரணையில், கோகுல் நடத்தி வந்த செல்போன் கடையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு பரத் வேலை செய்ததும், அங்கிருந்த விலை உயர்ந்த போனை அவர் திருடியதாகக் கூறி வேலையை விட்டு நீக்கப்பட்டதும் தெரியவந்தது.

இந்த ஆத்திரத்தில் இருந்த கோகுல் மற்றும் அவரது நண்பர்கள், சம்பவத்தன்று இரவு பரத்தை நைசாகப் பேசி சுடுகாட்டுப் பகுதிக்கு வரவழைத்துச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த பரத் உயிரிழந்ததை அடுத்து, மூவரும் அங்கிருந்து தப்பியோடினர்.
தற்போது தலைமறைவாக இருந்த மூன்று பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். முன் விரோதம் காரணமாக நபரை அழைத்துச் சென்று கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

