கோவை மாவட்டம் மதுக்கரை அருகே உள்ள சுந்தராபுரம் ரோடு பாரதி காலனியைச் சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 55). இவர் டிரைவர் ஆக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மகன் விக்னேஷ் குமார் (வயது 28). இவர் மதுக்கரை ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வந்தார். விக்னேஷ் குமாருக்கு திருமணம் ஆகி சரண்யா என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் விக்னேஷ் குமார் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டு வந்து உள்ளார்.
இதனால் அவரது மனைவி சரண்யா கடந்த 6 மாதத்திற்கு முன்பு கோபித்துக் கொண்டு அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் விக்னேஷ் குமார் அவரது பாட்டி சாரதாம்பாள், தந்தை செல்லத்துரை பராமரிப்பில் இருந்து வந்தார். ஆனாலும் தொடர்ந்து தினமும் விக்னேஷ் குமார் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்து உள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு விக்னேஷ் குமார் குடித்துவிட்டு மது போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதை தந்தை செல்லத்துரை தட்டி கேட்டு உள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த விக்னேஷ் குமார் தந்தை செல்லத்துரை இருந்த அறைக்கதவை பூட்டி தகராறில் ஈடுபட்டு உள்ளார். அப்போது ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் விக்னேஷ் குமார் கீழே விழுந்தார்.
இதில் அவரது கண், உதடு, முகத்தாடை உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்து மயங்கினார். உடனே அவரை அக்கம், பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மதுக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விக்னேஷ் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே அவரது உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. கீழே தள்ளி விட்டதில் விக்னேஷ் குமார் இறந்ததால் அவரது தந்தை செல்லத்துரை மீது மதுக்கரை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

